விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகிஉள்ளது 'திட்டம் இரண்டு'. முதன்முறையாக இதில் காவல்துறை ஆய்வாளராக நடித்துள்ளார் ஐஸ்வர்யா.
"உண்மைச் சம்பவம் ஒன்றை மையமாக வைத்து காட்சிகளைக் கோர்த்துள்ளார் இயக்குநர். ஒரு கொலைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டிய பொறுப்பு நாயகியிடம் ஒப்படைக்கப்படுகிறது.
"கொலை செய்யப்பட்ட இளம் பெண் தனது தோழி என்பது நாயகிக்கு தெரிய வரும்போது கடும் அதிர்ச்சி அடைகிறாள். உயிர்த்தோழியை கொன்றது யார் என்பதை அறிய தீவிர விசாரணையில் ஈடுபடுகிறார்.
"காவல்துறை அதிகாரி என்றதும் வழக்கமாக நீங்கள் திரைப்படங்களில் காணும் இத்தகைய கதாபாத்திரங்களை கற்பனை செய்யாதீர்கள். மிடுக்காக வந்துபோவதும் விறைப்பாக வசனம் பேசுவதும் மட்டுமே என் வேலையல்ல. இதை இயக்குநர் முன்பே தெளிவாகக் கூறிவிட்டார்.
"என்னதான் போலிஸ் அதிகாரியாக இருந்தாலும், சராசரிப் பெண்ணாகவும் வலம் வருவேன். ஒரு பெண் எதிர்கொள்ள வேண்டிய இதர அம்சங்களையும் இந்தக் கதாநாயகி தன் வாழ்க்கையில் சந்திப்பாள். எனவே எனது நடிப்பில் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டியிருந்தது.
"மிடுக்கான அதிகாரியாக நடித்துவிட்டு, பின்னர் திடீரென குடும்பப் பெண்ணாக மாறுவது என்பது சற்றே சவாலான ஒன்றுதான். ஆனாலும் இது எனக்குப் பிடித்திருந்தது.
"கொரோனா நெருக்கடியில் மொத்த உலகமும் சிக்கிக் கொண்டுள்ளது. அதிலும் சினிமா துறை தத்தளிக்கிறது. சினிமா தொழிலாளர்களின் குடும்பங்கள் தவிக்கின்றன.
"இத்தகைய சூழலில் ஒரு படத்தை முடக்கி வைப்பது சரியல்ல. படத்தை முடித்த பிறகும் வெளியிட முடியாமல் ஒரு தயாரிப்பாளர் தவிப்பதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
"திரையரங்குகளில் படத்தை வெளியிட வேண்டும் என்ற முடிவுடன்தான் படம் எடுக்கிறோம். அதற்கு வாய்ப்பு இல்லை எனும்போது மாற்று ஏற்பாடுகளைச் செய்யத்தான் வேண்டும்.
"ஒரு படம் தரமாக இருந்தால் போதும். திரையரங்குகளில் இடம் கிடைக்காவிட்டாலும், இணையத்தில் அதை வெளியிட முடியும் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்பது பெரிய விஷயமாகவே படுகிறது," என்கிறார் ஐஸ்வர்யா.
தாம் நடித்த 'க/பெ.ரணசிங்கம்' படத்துக்கு 'ஓடிடி' தளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது என்று சுட்டிக்காட்டுபவர், 'சூரரைப் போற்று', 'மண்டேலா', 'சார்பட்டா பரம்பரை' உள்ளிட்ட படங்களும் நேரடியாக இணையத்தில் வெளியாகி நல்ல வசூல் கண்டுள்ளதாகச் சொல்கிறார்.