கொவிட்-19 நோய்ப் பரவல் கிட்டத்தட்ட உலகின் எல்லாப் பொருளியல்கள்மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் சூழலுக்கு ஏற்ப, விரைந்து உருமாறிக்கொள்பவை வலுவாக மீண்டு எழுந்து, மற்ற நாடுகளைவிட முன்னேறிச் செல்லும் என்றும் வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
"கொரோனா பரவல் ஓய்ந்தபின் நாம் பின்தங்கிவிடாமல் இருப்பதை உறுதிசெய்ய, தலைமுறைக்கு ஒருமுறை ஏற்படும் இந்த நெருக்கடியைத் தலைமுறைக்கு ஒருமுறை கிட்டும் வாய்ப்பாக மாற்றிக்கொண்டு, நமது தொழில்களை உருமாற்றி, புதிய வளர்ச்சித் துறைகளை உருவாக்கி, உலகப் பொருளியல்களுடனான நமது தொடர்புகளை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும்," என்று அமைச்சர் கான் நாடாளுமன்றத்தில் நேற்று அமைச்சர்நிலை அறிக்கையின்போது கூறினார்.
தொழில்துறைகளுக்கு ஆதரவு அளிக்கவும் வேலைகளைப் பாதுகாக்கவும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அரசாங்கம் எட்டு வரவுசெலவுத் திட்டங்களைத் தாக்கல் செய்துள்ளதாக திரு கான் குறிப்பிட்டார். நேற்று தாக்கல் செய்யப்பட்ட துணை வழங்கல் மசோதாவும் அதிலடங்கும்.
வேலை ஆதரவுத் திட்டம், வேலை உருவாக்கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டம், வாடகை நிவாரணம், வரித் தள்ளுபடி, நிறுவன நிதியாதரவுத் திட்டம் போன்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. கடனைக் காலந்தாழ்த்திச் செலுத்த வகைசெய்யவும் அரசாங்கம் வங்கி களுடன் இணைந்து பணியற்றியது.
"நிறுவனங்கள் பெரும் சரிவை எதிர்கொள்வதையும் பேரளவில் மந்தநிலை ஏற்படுவதையும் வேலையின்மை விகிதம் உயர்வதையும் தவிர்க்க இந்தத் திட்டங்கள் உதவின," என்றார் அமைச்சர் கான்.
இத்திட்டங்கள் அவசியமானதாகவும் கைகொடுப்பதாகவும் இருந்து வந்தாலும், இவை 'தற்காலிக வலிநீக்கி'யாகவே இருக்க முடியும் என்றும் திரு கான் கூறினார். மேலும், பொருளியல் மீண்டும் வளர்ச்சி காணும் வகையில் தங்களது தொழில்களை மீண்டும் முழுமையாகத் தொடங்க விரும்புவதாக நிறுவனங்களும் ஊழியர்களும் அதிகாரிகளிடம் சொன்னதாக திரு கான் கூறினார்.
ஆதலால், பலரும் தங்களது தொழில்களை உருமாற்றி புதிய வாய்ப்புகளை நாடி வருவதாகவும் மீட்சிக்குத் தயாராகி வருவதாகவும் அவர் சொன்னார்.
ஆனாலும், அன்றாடச் சவால்களை எதிர்கொள்வதும் உருமாறுவதற்குத் தேவையானவற்றைச் செய்வதும் நிறுவனங்களுக்கு எளிதாக இராது என்பதை அவர் ஒத்துக்கொண்டார்.
அதனால்தான், கொவிட்-19 பரவலுக்குப் பிந்திய சிங்கப்பூரின் பொருளியல் உத்திகளை ஆராய் வதற்காக கடந்த ஆண்டு மே மாதம் 'மேலும் வலிமை பெற்று எழுவதற்கான பணிக்குழு' அமைக்கப்பட்டது என்றார் அமைச்சர் கான்.
இவ்வாண்டு மே மாதம் அந்தப் பணிக்குழு தனது அறிக்கையை வெளியிட்டது. பொது-தனியார் துறைகள் பங்காளித்துவத்துடன் அது அமைத்த ஒன்பது செயற்கூட்டணிகள் நம்பிக்கை அளிக்கும்படியான முடிவுகளை வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.