மாணவர்கள், பள்ளிப் பணியாளர்கள் ஆகியோருக்கு சுகாதார ஆபத்து எச்சரிக்கைகளைச் சுகாதார அமைச்சு விடுத்திருந்தால், ஒப்புதல் வழங்கப்பட்ட விடுப்பில் அவர்கள் வைக்கப்படுவர். 'பிசிஆர்' பரிசோதனையைச் செய்துகொண்டு அதில் அவர்களுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இல்லை என்று உறுதியான பின்னரே பள்ளிக்கு அவர்கள் திரும்ப முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மாணவர்களைப் பொறுத்தவரையில், ஒரே வீட்டில் இருக்கும் நபருக்கு இத்தகைய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பின், அந்த நபர் செய்துகொண்ட 'பிசிஆர்' பரிசோதனை முடிவில் கிருமி பாதிப்பு இல்லை என்று உறுதியாகும் வரை அம்மாணவர் விடுப்பில் இருப்பார்.
கொவிட்-19 நோயாளியுடன் தொடர்பில் இருந்திருந்தால் அல்லது கூடுதல் ஆபத்துள்ள இடத்திற்கு கொவிட்-19 நோயாளி சென்ற அதே நாளன்று சென்றிருந்தால் சுகாதார ஆபத்து எச்சரிக்கைகள் விடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சின் இணையத்தளத் தகவல்கள் கூறுகின்றன.
எச்சரிக்கை கிடைத்ததை அடுத்து செய்துகொள்ளும் முதல் 'பிசிஆர்' பரிசோதனையில் கிருமித்தொற்று இல்லை என்ற உறுதி கிடைக்கும்வரை ஒருவர் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இதையடுத்து, குறிப்பிட்ட சில பரிசோதனை நிலையங்களுக்குச் சென்று மீண்டும் ஒரு 'பிசிஆர்' பரிசோதனையைச் செய்து, கிருமித்தொற்று இல்லை என்பதை மறுஉறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஜூரோங் மீன்பிடித் துறைமுகம், கேடிவி மனமகிழ்க் கூடங்கள் ஆகியவற்றின் தொடர்பில் பெரியளவிலான கிருமித்தொற்றுக் குழுமங்கள் உருவாகியுள்ள நிலையில், இதுவரை பள்ளி சார்ந்த கிருமித்தொற்றுப் பரவல் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிய வந்துள்ளது.
கடந்த சில வாரங்களில் குறைந்தது 11 பள்ளிகளில் கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.