'கோடியில் ஒருவன்' படம் தென்னிந்தியாவில் ஏராளமான இடங்களில் வெளியீடு கண்டிருப்பது விஜய் ஆண்டனியை உற்சாகம் அடைய வைத்துள்ளது.
தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 800 திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஆத்மிகா நடிப்பில் உருவாகி உள்ள இப்படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்துக்கு கிடைத்துள்ள விமர்சனமும் இதுவரையிலான வசூல் நிலவரமும் விஜய் ஆண்டனியின் உற்சாகத்தை அதிகப்படுத்தி உள்ளதாகத் தகவல்.
இதற்கிடையே, சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற 'நான் கடவுள் இல்லை' படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியீட்டு நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி நாயகனாக நடித்துள்ள படம் இது.
மாலை ஆறு மணிக்கு தொடங்க வேண்டிய விழா இரவு 7.30 மணிக்குதான் துவங்கியது. சிறப்பு விருந்தினரான விஜய் ஆண்டனி வந்து சேர தாமதமானதே இதற்குக் காரணம்.
அவர் காய்ச்சலால் அவதிப்படுவதால் தாமதமாகிவிட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். அதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் ஆண்டனிக்கு உடல்நிலை சரியில்லை என்ற போதிலும் நிகழ்ச்சிக்கு வந்திருப்பதாகவும் அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
"அவர் எப்போதுமே நேர்மறை சிந்தனையுடன் செயல்படக் கூடியவர். அதனால்தான் எப்படியாவது நிகழ்ச்சிக்கு வருமாறு கூறினேன். அவரும் வந்துள்ளார். இதன் பின்னர் அவர் உடல்நிலை சீராகிவிடும். அவர் வழக்கம்போல் இயங்குவார்," என்றார் எஸ்ஏசி.
ஆனால், விஜய் ஆண்டனிக்கு காய்ச்சல் என்று தெரிந்ததும், விழா மேடையில் அவருக்கு அருகில் அமர்ந்திருந்த அனைவருக்கும் கடும் அதிர்ச்சி.
தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ உடனடியாக ஆண்டனி தடுப்பூசி போட்டுக்கொண்டாரா என்று நேரடியாக விசாரித்தார்.
கடும் காய்ச்சல் இருக்கும்போது எப்படி விழாவில் கலந்துகொள்ளலாம் என்று நிகழ்ச்சிக்கு வந்திருந்த செய்தியாளர்கள் முணுமுணுத்தனர்.
"ஒன்று ஆண்டனிக்கு காய்ச்சல் உள்ள விவரத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சொல்லாமல் இருந்திருக்கலாம். அல்லது விஜய் ஆண்டனியாவது நிகழ்ச்சிக்கு வருவதை தவிர்த்திருக்கலாம்," என்று செய்தியாளர்கள் சிலர் தெரிவித்தனர்.