தமது நகைச்சுவைக் காணொளிகளின் வழி பல சிங்கப்பூர் தமிழர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் உள்ளூர் நகைச்சுவைக் கலைஞர் கெல்லி ராமு. இவரது 'கெல்லிஸ் காமெடி'யில் தாய், மகள் இடையிலான நகைச்சுவையான உரையாடல்கள், யதார்த்தமாக அமைந்துள்ளன.
தமிழ் இளையர் விழாவை முன்னிட்டு அவரது காணொளிகள், அவரின் வலையொலித் தளம் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
"இன்றைய இளையர்களை மையப்படுத்தி இரு காணொளிகளை உருவாக்க தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு என்னை அணுகியது. சிங்கப்பூர் தமிழ் இளையர்களை எனது காணொளிகள் சென்றடையும் என்பது மகிழ்ச்சி தருகிறது," என்றார் கெல்லி.
2016ல் தொடங்கப்பட்ட 'கெல்லிஸ் காமெடி' நகைச்சுவைக் காணொளித் தொகுப்பு, மனஅழுத்தத்தால் அவதிப்பட்ட கெல்லியை அதிலிருந்து மீண்டுவர உதவியது. தமிழில் நகைச்சுவைக் காட்சிகளை விரும்பிப் பார்க்கும் இவர், தனது எழுத்துத் திறனையும் நடிப்புத் திறனையும் கொண்டு 30 வினாடி நகைச்சுவைக் காணொளிகளாக உருவாக்கத் தொடங்கினார்.
ஓர் ஆண்டுக்குப் பின், இதில் முழுமையாகக் கவனம் செலுத்த தனது முழுநேர வேலையை விட்டுவிட முடிவு செய்தார். ஒவ்வொரு வாரமும் தம் அம்மாவைக் கேலி செய்யும் நகைச்சுவைச் காணொளிகளை வெளியிட்டு பார்வையாளர்களைச் சிரிக்கவைக்கிறார் கெல்லி.
"நான் இப்பயணத்தைத் தொடங்கியபோது தமிழில் பேச மிகவும் சிரமப்பட்டேன். ஆனால் மீண்டும் மீண்டும் முயன்று இப்போது என்னால் சரளமாகத் தமிழில் பேசமுடிகிறது.
"நகைச்சுவை வழி இளையர்களை தமிழ் மொழி சென்றடைவதில் எனக்கும் ஒரு பங்குண்டு என்பதில் எனக்குப் பெருமையாக இருக்கிறது," என்றார் கெல்லி.