திடீரென தனது ரசிகர்களை ஒன்றுதிரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் சிம்பு. அவர் அரசியலில் ஈடுபடப்போவதாக ஒரு பேச்சு கிளம்பி உள்ளது.
இதுவரை தமது ரசிகர்களை, 'என் உயிரினும் மேலான ரசிகர்களே' என்று குறிப்பிடுவதுதான் சிம்புவின் வழக்கம்.
இப்போது அதில் சிறிய மாற்றம் செய்து, 'மதிப்பும் பேரன்பும் கொண்ட என் ரத்தத்தின் ரத்தமான உறவுகளே' என்று அழைக்க ஆரம்பித்திருக்கிறார்.
இதில் கூடுதல் அன்பும் நெருக்கமும் தெரிவதாக ரசிகர் கூட்டம் நெகிழ்கிறது.
வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள 'மாநாடு' தீபாவளி பண்டிகையின்போது திரைகாண உள்ளது. இதில் நிறைய அரசியல் பேசப்பட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியான நிலையில், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார் சிம்பு.
''நீண்ட நாளாக இயற்கையின் செயல்களால், உங்களிடம் நேரடியாக உறவாடாமல், தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டோம்.
"இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி, மருத்துவ அணி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு அணி, கலை இலக் கிய அணியின் மூலம் மன்றத்தின் பணிகளை விரிவுபடுத்த உள்ளோம்.
"ஆகையால் மாநில, மாவட்ட, வட்ட, பொறுப்பாளர்கள் நமது தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு கலந்துகொள்ள பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,'' என்று தமது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரசிகர்களுடனான சந்திப்புக்கு நாள் குறித்த பிறகு அதுகுறித்து அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் சிம்புவின் அரசியல் பிரவேசம் என்ற தலைப்பில் தொடர் விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
ஆனால், அவருக்கு நெருக்கமான தரப்பிலோ, சிம்புவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை எனக் கூறப்படுகிறது.
ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகு ரசிகர்களுடன் அறவே பேச முடியவில்லை, அவர்களை நேரில் சந்திக்க முடியவில்லை என்பது சிம்புவுக்கு வருத்தம் அளித்துள்ளது என்றும் இந்த இடைவெளி பெரிதாகிவிடக்கூடாது என அவர் கருதுவதாகவும் கூறப்படுகிறது.