இம்மாதம் 15ஆம் தேதியிலிருந்து வாடகை விமானங்கள் மூலமாக வரும் வெளிநாட்டினர்க்கும் அடுத்த மாதம் 15ஆம் தேதியிலிருந்து வெளிநாட்டினர் அனைவர்க்கும் சுற்றுப்பயண விசா வழங்கப்படும் என்று இந்திய உள்துறை அமைச்சு அறிவித்திருக்கிறது.
அதே நேரத்தில், இந்தியா செல்லும் சுற்றுப்பயணிகள், அங்கு அறிவிக்கப்பட்டுள்ள கொவிட்-19 நெறிமுறைகள் அனைத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் இந்தியா செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
இவ்வாண்டுத் தொடக்கத்தில் அங்கு பேரச்சத்தை ஏற்படுத்தும் அளவிற்கு கிருமித்தொற்று உயர்ந்த நிலையில், இப்போது ஒருநாள் பாதிப்பு 20,000க்கும் குறைவாகவே இருந்து வருகிறது.
இதனையடுத்து, பொருளியலில் தூணாக விளங்கும் சுற்றுலாத் துறையை மீண்டும் திறக்க அனுமதி வழங்கும்படி அத்துறையினர் அரசாங்கத்தை வலியுறுத்தி வந்ததாகச் சொல்லப்படுகிறது.
கிருமிப் பரவலுக்குமுன், இந்தியப் பொருளியலில் சுற்றுலாத்துறையின் பங்கு கிட்டத்தட்ட பத்து விழுக்காடாக இருந்தது. 2019ஆம் ஆண்டில் மட்டும் 10.93 மில்லியன் சுற்றுப்பயணிகள் இந்தியா வந்து சென்றதாக அந்நாட்டு அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில், இந்தியச் சுற்றுப்பயண நிறுவனங்கள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் மெஹ்ரா, இந்திய அரசின் புதிய அறிவிப்பை வரவேற்றுள்ளார்.
"இந்த அறிவிப்பு சுற்றுலாத் துறைக்கு மிகுந்த ஊக்கமும் நிம்மதியும் அளிப்பதாக அமைந்துள்ளது. இதனால், உள்நாட்டில் சுற்றுலாத் துறை மீண்டும் உயிர்பெறத் தொடங்கும்," என்றார் திரு ராஜீவ்.