சென்னை: உலகத்தரம் வாய்ந்த உயிரோவியக் கல்வி நிறுவனம் அமைக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்து உள்ளார்.
சென்னையில் நடந்த தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் மற்றும் தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் அவர் பேசினார்.
அவரிடம் திரைப்பட சங்கங்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது.
அந்த மனுவில் கொரோனா காரணமாக திரைப்படத்துறையினர் சந்திக்கும் பிரச்சினைகள், பிராணிகள் நலவாரிய சான்றிதழ் பெறுதல், படப்பிடிப்புகளுக்கு ஒற்றை சாளர முறை அனுமதி, மண்டல திரைப்பட தணிக்கை அலுவலகங்களில் பிராணிகள் நல வாரிய பிரிவை ஏற்படுத்துதல், திரைப்பட தணிக்கை வாரியத்தில் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களை அதிகம் இடம்பெறச் செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகள் இடம்பெற்று இருந்தன.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எல்.முருகன், திரைப் படத்துறையினரின் கோரிக்கைக்குத் தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும் என்றும் உறுதி அளித் தார்.
"திரைப்படத்துறையில் தொழில் புரிவதை எளிமையாக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
"சினிமா படப்பிடிப்புகளுக்கு பல்வேறு துறைகளிடம் எங்கு அனுமதி பெறுவது போன்ற விவரங்கள் அடங்கிய இணையத்தளம் அமைச்சின் சார்பில் ஏற்கெனவே தொடங்கப்பட்டு உள்ளது.
"இந்தப் புதிய இணையத் தளம் மூலம் தயாரிப்பாளர்கள், இந்தியாவில் எந்தப் பகுதியிலும் படப்பிடிப்பு நடத்த இணையம் வழியாக அனுமதி பெற வகை செய்வதோடு தொழில் புரிவதை எளிமையாக்குவதை உறுதி செய்யும்" என்றார்.
'அனிமேஷன்' கல்வி வி.எப்.எக்ஸ். தொழில்நுட்பத்தை பயில உலகத்தரத்திலான கல்வி நிறுவனம் ஒன்றை ஏற்படுத்த மும்பை ஐ.ஐ.டி.யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.