சென்னை: பழமையான கலா சாரத்தைக் கொண்ட தமிழ்நாட்டில் ஒரு நீதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொள்வது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகக் கூறியுள்ள பரேஷ் ரவிசங்கர் உபாத்யாய், ஒரு தமிழ் ஆசிரியரை நியமித்து தன் பேரனுடன் சேர்ந்து தானும் தமிழ் கற்றுக் கொள்ளப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
அதிபர் ராம்நாத் கோவிந்த், உச்ச நீதிமன்ற நீதிபதி என்வி.ரமணா ஆகியோரின் உத்தரவுப்படி குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து வந்த பரேஷ் ரவி சங்கர் உபாத்யாய், சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய நீதி பதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வுக்குப் பிறகு நீதிபதி ரவிசங்கர் உபாத்யாய் பேசியபோது, ''பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றது குறித்து பெருமைப்படுகிறேன். என் மீதுள்ள எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வேன். தற்போது தமிழகத்தின் குடிமகனாக ஆகியுள்ள நான், எனது பேரனோடு சேர்ந்து தமிழ் கற்கப்போகிறேன்," என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
''கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிபதியாக நான் பதவி வகித்தாலும் இன்றும் மனதளவில் ஒரு வழக்கறிஞராகத்தான் உள்ளேன்.
''வழக்கறிஞர்கள் முன்னிலை ஆகவில்லை என்பதற்காக இதுவரை ஒரு வழக்கைக்கூட நான் தள்ளுபடி செய்தது கிடையாது. ஆனால் அதை வழக்கறிஞர்கள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது,'' என்றார்.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மேலும் 10 புதிய நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரை செய்துள்ளனர்.