பக்கவிளைவுகளுக்கு அஞ்சி, கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியைச் சிலர் போட்டுக்கொள்ளாமல் தாமதித்தனர். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள், உணவங்காடி நிலையங்கள் உட்பட எல்லா இடங்களிலும் அமர்ந்து உணவு உண்ண முடியாது என்று சனிக்கிழமையன்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, மனதை மாற்றிக்கொண்டனர்.
சனிக்கிழமை முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்காக மேலும் பலர் தங்களை நாடி வருவதாக மருந்தகங்களும் தனியார் சுகாதாரப் பராமரிப்புச் சேவை வழங்குநர்களும் தெரிவித்துள்ளன.
சமூகத்தில் பதிவாகும் கொவிட்-19 சம்பவங்கள் அதிகரித்து வருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உணவங்காடி நிலையங்கள், காப்பிக் கடைகளில் அமர்ந்து உணவருந்தவும் கடைத்தொகுதிகளுக்குள் செல்லவும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
அத்துடன் 11 நாடுகளுக்குத் தனிமை உத்தரவு ஏதுமின்றி, தடுப்பூசி போட்டுக்கொண்டோர் செல்லக்கூடிய சிறப்புப் பயணத் தடத் திட்டமும் (விடிஎல்) அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தடுப்பூசியை நாடி வருவோரில் பெரும்பாலானோர் 'பூஸ்டர்' தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதாக பிரதான தனியார் சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர்கள் தெரிவித்தனர். வார இறுதியை அடுத்து பூஸ்ட்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வருவோரில் 20% அதிகரிப்பு இருப்பதாக 12 தடுப்பூசி மையங்களைக் கொண்ட 'ராஃபிள்ஸ் மெடிக்கல் குரூப்' குறிப்பிட்டது.