வெஸ்ட்லைட் ஜாலான் துக்காங் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் உள்ளவர்களில் 55%க்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது என்பதைச் சரிபார்த்து அந்த விடுதி உறுதிசெய்து இருக்கிறது என்று நேற்று மனிதவள அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
எஞ்சிய 45 விழுக்காட்டு ஊழியர்களைப் பொறுத்தவரை, தடுப்பூசி சரிபார்ப்பு நடைமுறை இன்னமும் முடியாமல் இருக்கிறது. அல்லது அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கிறார்கள்.
ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டு இருக்கிறார்களா என்பதைச் சரிபார்க்கும் நடைமுறை தொடர்பில் முதலாளிகளுடன் சேர்ந்து தொடர்ந்து செயல்படப்போவதாக அமைச்சு குறிப்பிட்டு உள்ளது.
வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அமைச்சு குறிப்பிட்டு உள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்களை அது வலியுறுத்தி இருக்கிறது.
வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட வெளிநாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொண்டு இருப்பவர்கள் சிங்கப்பூருக்கு வந்ததும் அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டு இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்துவதற்கான சரிபார்ப்பு நடைமுறை மேற்கொள்ளப்படும்.
வெளிநாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ்களை அவர்கள் தாக்கல் செய்யவேண்டும். சிங்கப்பூரில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ நிலையத்தில் பரிசோதனைக்கு உட்பட்டு அவர்களுக்குத் தொற்று இல்லை என்பதும் தெரியவர வேண்டும்.
ஒருவர், பைசர்-பயோஎன்டெக்/கொமிர்னாட்டி, மொடர்னா, உலக சுகாதார நிறுவனம் அவசர பயனீட்டுக்கு அங்கீகரித்துள்ள தடுப்பூசிகளை முழுமையாக போட்டுக்கொண்டதற்கு இரண்டு வாரங்கள் கழித்து தடுப்பூசி போட்டுக்கொண்டவராக வகைப்படுத்தப்படுவார்.
தடுப்பூசி போட்டுக்கொண்டது உறுதிப்படுத்தப்பட்டதும் அவர்களின் பெயர் தேசிய நோய்த் தடுப்பாற்றல் பதிவேட்டில் இடம்பெறும்.
டிரேஸ்டுகெதர் செயலியிலும் இதைத் தெரிந்துகொள்ளலாம்.
இதனிடையே, வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் இருப்போருக்கான சுகாதாரப் பராமரிப்பு நடைமுறைகளில் மாற்றங்கள் நடப்புக்கு வந்துள்ளன.
விடுதியிலேயே தங்கிக் குணமடையும் ஏற்பாடு அந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக அமலாகி இருக்கிறது.
அந்தப் புதிய விதிமுறைகள் ஊழியரின் வேலை மற்றும் வாழ்க்கைப் பாதிப்புகளைக் குறைப்பதை நோக்கமாகக்கொண்டது.
அவை விடுதிவாசிகளுக்கு வசதியாக இருக்கிறது என்றாலும் சிறுசிறு பிரச்சினைகள் எதிர்நோக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.