பலி எண்ணிக்கை 48ஐ எட்டியது; வீடுகளை இழந்து மக்கள் தவிப்பு
டேராடூன்: உத்தரகாண்டில் கடந்த ஆறு நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மாநிலத்தின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் இருளில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழையால் அணைகளின் நீர்வரத்து அதிகரித்து ஆறுகளில் வெள்ளம் கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஆறுகளை ஒட்டி கட்டப்பட்டிருந்த வீடுகள் பல நீரில் அடித்துச்செல்லப்பட்டன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழையால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. அந்தக் கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், வெளி மாநிலங்களில் இருந்து அங்கு சுற்றுப்பயணம் சென்றோர் அங்கிருந்து தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கிக்கொண்டிருப்பவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. சாலைகளும் பாலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மீட்புப்பணியைச் சரிவரச் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு மழை, வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை 48ஐ எட்டியுள்ளது, பலரைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், கனமழைக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடும் வீடுகளை இழந்தோருக்கு 1,90,000 ரூபாயும் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் அறிவித்துள்ளார்.
இதனிடையே ஹெலிகாப்டர் மூலம் வெள்ளச் சேதங்களை பார்வையிட்ட உத்தரகாண்ட் முதலமைச்சர், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தரப்படும் என உறுதி அளித்துள்ளார். தொடர்ந்து, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று உத்தரகாண்ட் சென்று அங்குள்ள நிலைமை குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.