கள்ளக்குறிச்சி: பட்டாசுக் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் சங்கராபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் பட்டாசுகள் விற்பனை களைகட்டி உள்ளது. பல்வேறு நிபந்தனைகள், கட்டுப்பாடுகளுடன் பட்டாசுக் கடைகளைத் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் முருகன் என்பவர் பட்டாசுக் கடை வைக்க அனுமதி பெற்றிருந்தார். நேற்று முன்தினம் இரவு இவரது கடையில் ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கின. ஒன்றன்பின் ஒன்றாக வெடித்துச் சிதறிய பட்டாசுகள் ஏற்படுத்திய தீப்பிழம்பு காரணமாக மொத்த கடையும் பற்றி எரிந்தது.
இதில் கடையில் இருந்த ஆறு பேரும் உடல் கருகி அங்கேயே பலியாகினர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசு கடை பற்றி எரியும் காட்சிகள் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.