கொவிட்-19 வாராந்திரத் தொற்று அதிகரிப்பு விகிதம் நேற்று முன்தின நிலவரப்படி 0.93ஆகக் குறைந்தது. கடந்த புதன்கிழமை அது 0.96ஆக இருந்தது. இந்தத் தகவல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்த விகிதம் ஒன்றுக்குக் குறைவாகப் பதிவாகி உள்ளது. வாராந்திர தொற்று அதிகரிப்பு விகிதம் ஒன்றுக்கும் அதிகமாக இருந்தால் புதிய வாராந்திர கொவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாக அர்த்தம்.
இருப்பினும், கொவிட்-19 காரணமாக சிங்கப்பூரில் நேற்று முன்தினம் மேலும் 17 பேர் மாண்டனர். அவர்கள் 55 வயதுக்கும் 93 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்கள் அனைவரும் ஏற்கெனவே வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. ஆனால் அது குறித்து அமைச்சு கூடுதல் விவரங்கள் வெளியிடவில்லை.
நேற்று முன்தின நிலவரப்படி சிங்கப்பூரில் இதுவரை 459 பேர் கொவிட்-19 காரணமாக மாண்டுவிட்டனர்.
இந்நிலையில், மனநலக் கழகத்தில் உருவாகியுள்ள கொவிட்-19 குழுமம் 294 பேரிலிருந்து 338ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 317 பேர் நோயாளிகள், 21 பேர் ஊழியர்கள். இதுவே சுகாதார அமைச்சு உன்னிப்பாகக் கண்காணித்து வரும் ஆகப் பெரிய கொவிட்-19 குழுமம்.
தேவைப்பட்டால் கடுமையான கொவிட்-19 அறிகுறிகள் கொண்ட நோயாளிகள் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுவர் என்று மனநலக் கழகம் நேற்று முன்
தினம் தெரிவித்தது. கடந்த புதன்கிழமை நிலவரப்படி ஏறத்தாழ 40 பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, நேற்று முன்தின நிலவரப்படி சிங்கப்பூரில் மேலும் 3,003 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் 2,780 சமூக அளவில் பாதிப்படைந்தனர். வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்குவிடுதிகளில் 220 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது. வெளிநாடு
களிலிருந்து வந்த மூவருக்கு கொவிட்-19 இருப்பது தெரியவந்தது.
சமூக அளவில் பாதிக்கப்பட்டோரில் 471 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள். சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 210,978ஆக அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 1,683 பேர் மருத்துவமனையில் உள்ளனர். அவர்களில் 286 பேருக்கு உயிர்வாயுக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
66 பேரின் உடல்நிலை சீரற்று இருப்பதாகவும் அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.