2015ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆக அதிக மழைப்பொழிவு; நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
வடகிழக்குப் பருவமழை தொடங்கி விட்ட நிலையில் கடந்த இரு நாள்களாகத் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலும் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒரே நாளில் 20 சென்டிமீட்டருக்குமேல் மழை பதிவானது. நேற்று முன்தினம் இரவிலிருந்து தொடர்ந்து 12 மணி நேரமாக இடைவிடாது பெய்த மழையால் பல பகுதிகளிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் மக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
வெள்ளநீர் தேங்கியதால் சில பகுதிகளில் ரயில் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டது. முன் எச்சரிக்கையாக சில பகுதிகளில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆறு சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன.
இன்னும் நான்கு நாள்களுக்குக் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்துள்ளதை அடுத்து, சென்னைக்குச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளிலிருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஆற்றோரமாக வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேற்று நேரில் சென்று ஆய்வுசெய்தார்.
அதன்பின், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை விடப்படுவதாக அவர் அறிவித்தார். தீபாவளித் திருநாளுக்காகச் சொந்த ஊர் திரும்பியுள்ள மக்கள் இன்னும் இரண்டு, மூன்று நாள்களுக்குப் பிறகு சென்னை திரும்புமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
சென்னையில் மழை பாதிப்பைக் கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, உறவினர் எச்சரித்தும் ஆற்றைக் கடக்க முயன்றவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் நிகழ்ந்தது.