ஆண்டுக்காண்டு அடிப்படையில் இவ்வருடத்தின் மூன்றாம் காலாண்டில் சேவைத் துறையின் வருவாய் 16 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. பொழுதுபோக்கு, தனிப்பட்ட சேவைகள் துறை மட்டும் இதற்கு விதிவிலக்கு. 'சிங்ஸ்டேட்' எனப்படும் சிங்கப்பூர் புள்ளி விவரப் பிரிவு இத்தகவல்களை வெளியிட்டது. தகவல், தொடர்புத் துறையில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் மொத்த வருவாய் 39.4 விழுக்காடு அதிகரித்தது. இணையச் சந்தைகள், கணினி விளையாட்டுகள் உள்ளிட்டவை தொடர்பான அம்சங்களில் வருவாய் அதிகரித்தது முக்கியக் காரணம். முந்தைய காலாண்டில் பதிவானதைக் காட்டிலும் இத்துறையின் வருவாய் ஏழு விழுக்காடு அதிகரித்தது.
'டிரான்ஸ்போர்ட்டேஷன் அண்ட் ஸ்டோரேஜ்' எனப்படும் போக்குவரத்துச் சேவைகள் துறை ஆண்டுக்காண்டு அடிப்படையில் 39.1 வளர்ச்சியடைந்தது. உலகளவில் எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் இதன் ஓர் அங்கமான விமானப் போக்குவரத்துத் துறையில் வர்த்தக நடவடிக்கைகள் அதிகரித்தது இதற்குக் காரணம். காலாண்டுக்குக் காலாண்டு அடிப்படையில் போக்குவரத்துச் சேவைகள் துறையின் வருவாய் 13 விழுக்காடு அதிகரித்தது.
எனினும், பொழுதுபோக்கு, தனிப்பட்ட சேவைகள் துறையில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் வருவாய் 13.3 விழுக்காடு குறைந்தது. சமூக ஒன்றுகூடல் விதிமுறைகள் முடுக்கிவிடப்பட்டதால் கண்கவர் இடங்கள், விளையாட்டு வசதிகள் ஆகியவை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நிலை உருவானது. இத்துறையின் வருவாய் காலாண்டுக்குக் காலாண்டு அடிப்படையிலும் 13.7 விழுக்காடு குறைந்தது.