லண்டன்: பிரிமியர் லீக் சரித்திரத்தில் ஆஸ்டன் வில்லா குழுவுக்கு பொறுப்பேற்றுக் கொண்ட எந்த நிர்வாகியும் தனது முதல் இரண்டு ஆட்டங்களில் தொடர் வெற்றி பெற்றதில்லை.
ஆனால், அந்தப் பெருமையை நேற்று முன்
தினம் ஆஸ்டன் வில்லாவுக்கு அண்மையில் புதிய நிர்வாகியாக பொறுப்பேற்றுக்கொண்ட ஸ்டீவன் ஜெரார்ட் தனதாக்கிக் கொண்டுள்ளார்.
கிறிஸ்டல் பேலஸ் அணியுடன் நேற்று முன்தினம் மோதிய ஆஸ்டன் வில்லா, அதை 2-1 என வெற்றி கொண்டது. கிறிஸ்டல் பேலஸ் நிர்வாகியும் முன்னைய ஆர்சனல் மத்திய திடல் ஆட்டக்காரருமான இருந்த பேட்ரிக் வியராவுக்கு இது முதல் தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.
மேக் டார்கெட், ஜான் மெக்குவின் ஆகிய இருவரும் வில்லா சார்பாக கோல்கள் போட, ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் பேலஸுக்கு மார்க் குவெகி ஆறுதலாக ஒரு கோல் போட்டார்.
கிறிஸ்டல் பேலஸுடனான ஆட்டம் குறித்துப் பேசிய ஜெரார்ட், "இந்த ெவற்றியின் மூலம் நாம் ஏதோ பெரிதாக சாதித்துவிட்டோம் என்று எண்ணிவிடக்கூடாது. நமது ஆட்டக்காரர்கள் அற்புதமாக சில நேரங்களில் விளையாடினர். சில சமயங்களில் நாம் நெருக்குதலை சமாளித்து தற்காத்து விளையாட வேண்டியிருந்தது.
எனினும், இறுதியில் வெற்றி பெற்றுவிட்டோம்," என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார். பேலஸ் அணியின் தற்காப்பு அரண் சில சந்தர்ப்பங்களில் விளையாட இயலாமல் இருப்பதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட வில்லா, முதல் கோலுக்கு கார்னர் வாய்ப்பை நன்கு நம்பியது வீண்போகவில்லை. பந்தை சக வீரர் டார்கெட்டை நோக்கி ஆஷ்லி யங் உதைக்க அவரும் அதை லாவகமாக கோல் வலைக்குள் போட்டார்.
அத்துடன், மத்திய திடலில் நக்காம்பா, ஜேக்கப் ரேம்ஸி இருவரும் பேலஸின் கோனர் கேலஹர் என்பவரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.
"பேலஸ் அணியின் தற்காப்பு அரண் கார்னர், ஃபிரீகிக் போன்ற வற்றை சமாளிக்க சிரமப்படும் என்பதை அறிவோம்," என்றார் மார்க் டார்கெட்.