முஹம்மது ஃபைரோஸ்
தோழிகள் கருப்பையா ருக்மணி, கே.சரோஜினி நாராயணன் இருவருக்கும் தனிமையை மறந்து மகிழ்ச்சியோடும் புத்துணர்வோடும் பலருடன் அளவளாவ வாய்ப்பளித் தது நீ சூன் தெற்கு தொகுதியில் வசிக்கும் மூத்த குடியிருப்பாளர்களின் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம். "இருவரும் பத்தாண்டுகளுக்கு மேலாக சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் பங்கேற்று வருகிறோம். ஒவ்வோர் ஆண்டும் புதுமையான அனுபவத்தைப் பெறுகிறோம். புதிய நண்பர்களைச் சந் திக்கிறோம். புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்கிறோம்," என்றார் திருவாட்டி ருக்குமணி, 72. "எங்களைப் போன்று வீட்டில் தனியாக வாழும் முதியவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஒன்று கூடும்போது தனிமையை மறந்து விடுகின்றோம். மற்றவர்களின் பாரம்பரியம், கலாசாரங்களைத் தெரிந்துகொள்ளவும் வாய்ப்புக் கிடைக்கிறது," என்றார் திருவாட்டி சரோஜினி, 77.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நீ சூன் குழுத்தொகுதி யின் அடித்தள அமைப்புகளுக்கான ஆலோசகரும் நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் லீ பீ வா, மூத்த குடிமக்களுக்கு மேண்டரின் ஆரஞ்சுப் பழங்களையும் அன்பர் தினத்தைக் கொண்டாட இதய வடிவிலான சாக்லெட்டுகளையும் உள்ளடக்கிய சிவப்புநிற பைகளைக் கொடுத்தார். மூத்தோரைக் கௌரவப்படுத்தி அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து சிறிய பரிசை வழங்குவது தமக்கு அளவற்ற மகிழ்ச்சி அளிப்பதாக டாக்டர் லீ கூறினார். "நீ சூன் தெற்கு தொகுதியில் வசிக்கும் மூத்தக் குடியிருப்பாளர்கள் அண்டை வீட்டாரை நன்கு தெரிந்து வைத்துள்ளனர். "காலை வேளைகளில் காப்பிக் கடைகளில் சக நண்பர்களுடன் அமர்ந்து அளவளாவுவது இவ்வட்டாரத்தில் வழக்கமான காட்சி. அத்துடன், இதுபோன்ற ஒன்று கூடல் நிகழ்ச்சிகள் சமூக உணர் வுக்கு வலுச் சேர்க்க உதவுகின்றன," என்றார் அவர்.
நீ சூன் தெற்கு தொகுதியில் வசிக்கும் மூத்த குடியிருப்பாளர்களுடன் டாக்டர் லீ பீ வா (இரண்டாவது வரிசையில் இடமிருந்து நான்காவது). நீ சூன் சவுத் சமூக மன்றத்தில் துடிப்புடன் மூப்படையும் குழு நேற்று ஏற்பாடு செய்திருந்த சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட மூத்த குடியிருப்பாளர்கள் பங்கேற்றனர். ஆட்டம், பாட்டம் கொண்டாட்டங்கள் நிறைந்த நிகழ்ச்சியில் பகல்நேர உணவு விருந்தும் வழங்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி, ஆண்டுதோறும் சீனப் புத்தாண்டின்போது பெரும்பாலும் தனியாக வாழும் மூத்தக் குடியிருப்பாளர்களிடையே விழாக்கால உணர்வு, அன்பு, பரிவு போன்றவற்றைப் பகிர்ந்து வருகிறது. படம்: மக்கள் கழகம்