சென்னை: முதல்வர் பன்னீர்செல்வம் தன் மனசாட்சிக்குப் பயந்து உண்மையைப் பேசியுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் என்ன நடக்கிறதென்றே தெரியாத ஒரு குழப்பம் நீண்டகாலமாக நீடித்து வந்த நிலையில் பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கும் கருத்துகள் மூலம் பல்வேறு திரைமறைவு செயல்கள் இங்கு அரங்கேறியிருப்பது தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
"முதல்வரின் பேட்டி மனசாட்சிக்குப் பயந்த ஒரு மனிதனாகத் தான் அவரை நமக்குக் காட்டுகிறது. மற்றவர்களைப்போல் பதவி கிடைக்கும் என்று அனுசரித்துப்போகாமல் உண்மையை மக்களுக்குச் சொல்லிவிடவேண்டும் என்று அவர் நினைத்தி ருக்கிறார். அவருக்குப் பின்னால் பாஜக இயக்குகிறது; மற்ற கட்சிகள் இயக்குகிறது என்பதை நான் ஏற்கவில்லை. மற்ற ஒரு கட்சியால் அவரை இயக்கிவிட முடியும் என்று நம்பவும் இல்லை. அப்படி இயக்கினாலும் பன்னீர்செல்வம் எழுப்புகிற நியாயமான கேள்விகளுக்குப் பதில் இருக்கிறதா? என்று பார்க்கவேண்டும்," என சீமான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் அங்கீகாரத்தோடு இருமுறை முதல்வராக்கப் பட்ட பன்னீர்செல்வம் தன் மனசாட்சிக்குப் பயந்து மக்கள் மன்றத்தில் உண்மைகளைக் கூறியிருப்பதற்கு மதிப்பளிக்காமல் தமிழ்ச்சமுகம் எளிதில் கடந்துவிட்டுப் போகமுடியாது என்றும் சீமான் மேலும் கூறியுள்ளார்.