மும்பை: ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விராத் கோஹ்லிக்குப் பதிலாக ரோகித் சர்மாவை இந்தியாவின் அணித் தலைவராகத் தேர்ந்தெடுத்தது, தேசிய அணியைத் தேர்ந்தெடுப்போரின் முடிவு என்றும் இதில் 'பிசிசிஐ' எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் தலைமைப் பொறுப்பு வகிப்பவர்களின் பங்கு ஏதும் இல்லை என்றும் சில தகவல்கள் தெரிவித்துள்ளன. நேற்று முன்தினம் வந்த அறிவிப்பிற்கு முன்பு அணித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுமாறு 33 வயது கோஹ்லி கேட்டுக்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவின் டி20 அணித் தலைவர் பொறுப்பிலிருந்து தான் விலகப்போவதாக கோஹ்லி சென்ற மாதம் அறிவித்திருந்தார். 20 ஓவர்களில் ஆடப்படும் டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டி கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அப்போட்டி முடிந்தவுடன் அணித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ளப்போவதாக கோஹ்லி கூறியிருந்தார். தனது சுமையை சீராகச் சமாளிக்கும் நோக்குடன் அந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார். அதனைத் தொடர்ந்து இப்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அணித் தலைவர் பொறுப்பு ரோகித்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் அணித் தலைவர் பொறுப்பைப் பங்குபோட்டுக்கொள்ளும் சூழல் உருவாகாமல் பார்த்துக்கொள்வதே இந்த முடிவின் நோக்கம் என்று சில தகவல்கள் தெரிவித்துள்ளன.
டெஸ்ட் தொடர்களிலும் அஜின்கியா ரகானேயிடமிருந்து அணியின் துணைத் தலைவர் பொறுப்பையும் ரோகித் பெற்றுக்கொள்வார். இம்மாதம் 26ஆம் தேதி முதல் தென்னாப்பிரிக்காவுடன் மூன்று டெஸ்ட் ஆட்டங்களிலும் மூன்று ஒருநாள் ஆட்டங்களிலும் இந்தியா ஈடுபடும்.