கொழும்பு: வெளிநாட்டவரை மணக்கும் இலங்கையர் அதற்கு முன்னதாக அந்நாட்டு தற்காப்பு அமைச்சின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்ற புதிய சட்டத்தைக் கொண்டுவர இலங்கை அரசாங்கம் திட்டமிடுகிறது.
தற்போதைய சட்டங்களின்கீழ், வெளிநாட்டவரும் இலங்கைக் குடிமக்களும் திருமணம் செய்வதை இலங்கை தற்காப்பு அமைச்சோ, அந்நாட்டு மக்கள்தொகைப் பதிவுத் துறையோ தடுக்க முடியாது. ஆனால் அடுத்த வாரத்திலிருந்து சட்டம் மாறுகிறது.
இலங்கை நாட்டவரை மணக்க விரும்பும் வெளிநாட்டவர், மருத்துவப் பரிசோதனையில் உடல்நலத்தை உறுதி செய்ய வேண்டும்.
அத்துடன் அவர்களைப் பற்றி தற்காப்பு அமைச்சு பாதுகாப்பு விசாரணையை நடத்தி ஒப்புதல் தரவேண்டும்.
இலங்கையின் சண்டே டைம்ஸ் நாளிதழ் இச்செய்தியை வெளியிட்டது. தேசியப் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இலங்கையின் தலைமைப் பதிவாளர் வீரசேகரா அதில் கூறினார்.
ஆனால் அரசாங்கத்தின் இத்திட்டத்தை எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பலரும் கண்டித்தனர்.