டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான எலோன் மஸ்க், அந்நிறுவனத்திஙன செயற்கை நுண்ணறிவுத் திறனின் வெற்றிக்கு முக்கிய காரணம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஒருவர் என்று கூறியுள்ளார்.
டெஸ்லா நிறுவனத்தின் தானியங்கு ஓட்டுநர் துறை அமைக்கப்பட்டபோது, அதில் முதலில் வேலைக்குச் சேர்க்கப்பட்டவர் அஷோக் எல்லுச்சாமி என்று மஸ்க் கூறினார்.
அஷோக் தற்போதுடெஸ்லாவின் தானியங்கு ஓட்டுநர் பொறியியல் பிரிவின் தலைவர் ஆவார்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் அந்நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த அவர், படிப்படியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
"மக்கள் எப்போதும் என்னையே அதிகம் புகழ்கின்றனர். ஆனால் டெஸ்லா செயற்கை நுண்ணறிவுத் துறை தானியங்கு ஓட்டுநர் பிரிவில் உள்ளவர்கள் மிகவும் திறமைசாலிகள். உலகின் அதிபுத்திசாலிகளில் அவர்களும் அடங்குவர்," என்று திரு மஸ்க் கூறினார்.
திரு அஷோக் எல்லுச்சாமி சென்னையின் கிண்டி பொறியியல் கல்லூரியில் மின்னியல் தொடர்பு பொறியியல் துறையில் இளநிலைப் பட்டம் பெற்றவர். பின்னர் அமெரிக்காவின் கார்னகி மெல்லன் பல்கலைக்கழகத்தில் இயந்திரக்கட்டமைப்புத் துறையில் அவர் முதுநிலைப் பட்டம் பெற்றார்.