தேடி, மீட்கும் பணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட 'ரோவர்-எக்ஸ்' இயந்திர நாய், இப்போது அபாயகரமான பொருள்கள் சார்ந்த சூழல்களைக் கையாளும் வகையிலும் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. இதற்கான சோதனை நடவடிக்கைகள் இவ்வாண்டு நடுப்பகுதியில் நிறைவுறும்.
எடுத்துக்காட்டாக, வேதி ஆலையில் வாயுக்கசிவு ஏற்பட்டால், தனது வாயு உணர்கருவியின் துணைகொண்டு 'ரோவர்-எக்ஸ்' இயந்திர நாயால் அதனைக் கண்டறிய இயலும். இது தொடர்பிலான பாவனை நடவடிக்கை மண்டாயில் உள்ள உள்துறைக் குழு நுண்ணறிவுசார் மையத்தில் நேற்று செய்துகாட்டப்பட்டது.
வாயுக்கசிவைக் கையாளும் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் அதற்குரிய 'ஹஸ்மெட்' பாதுகாப்பு அங்கியை அணிந்து, வாயுவின் செறிவை அளக்க வேண்டும். ஆனால், ரோவர்-எக்ஸ் அதனைச் செய்வதோடு, அதுகுறித்த தகவலையும் தளபத்திய, கட்டுப்பாட்டு நிலையத்திற்கு அனுப்பிவிடும்.
தன்னிச்சையாக இயங்கவல்ல இந்த இயந்திர நாய், வேதி ஆலைகளில் வழக்கமான ஆய்வுப் பணிகளையும் செய்யும்.
தீயணைப்புக் கருவிகள் உரிய இடங்களில் உள்ளனவா என்பதை உறுதிசெய்வதுடன், கண்ணுக்கு எளிதில் புலப்படாத வகையில் இயல்புக்கு மாறாக எதுவும் தெரிந்தாலோ அல்லது தீப்பற்றினாலோ கண்டறிந்து, எச்சரித்துவிடும்.
பெரிய வேதி ஆலைகளில் அளவீடுகளைக் குறிப்பது போன்ற திரும்ப திரும்பச் செய்யக்கூடிய பணிகளையும் இந்த இயந்திர நாய் செய்யும். இதனால் நேரமும் மனிதவளமும் மிச்சமாகும்.