57 இடங்களில் 200 அதிகாரிகள் சோதனை; ரூ.11.32 கோடி சொத்து சேர்த்ததாக புகார்
புதுடெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்திருப்பதாக எழுந்துள்ள புகாரை அடுத்து, முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வீட்டிலும் அவருக்குத் தொடர்புடைய இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
சென்னை, தர்மபுரி உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இந்தச் சோதனை நடைபெற்றது.
கே.பி. அன்பழகன், அவரது மனைவி, இரு மகன்கள், மருமகள் ஆகிய ஐந்து பேர் மீதும் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் மொத்தம் 11.32 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அவர் சேர்த்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், அன்றைய அமைச்சர்கள் பலர் முறைகேடாக சொத்து குவித்துள்ளதாக தொடர்ந்து புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன் பேரில், முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள் பதிவாகி வருகின்றன.
இதுவரை முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி ஆகிய ஐந்து பேர் சொத்துக்குவிப்பு வழக்குகளில் சிக்கி உள்ளனர். இந்நிலையில், கே.பி.அன்பழகன் மீதும் வழக்குப் பதிவாகி உள்ளது.
நேற்று காலை தர்மபுரியில் உள்ள கே.பி.அன்பழகன் வீட்டிலும் அவருடன் தொடர்புள்ள 57 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஒரே சமயத்தில் சோதனை மேற்கொண்டனர்.
மொத்தம் 200 அதிகாரிகள் இந்தநடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் பல்வேறு முக்கிய ஆவணங்களை அவர்கள் கைப்பற்றி உள்ளதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கே.பி. அன்பழகன் 2016 முதல் 2021 வரை உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கே.பி. அன்பழகனின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.