புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் இருக்கும் இந்தியா கேட் பகுதியில் கடந்த 50 ஆண்டு காலமாக ஒளிர்ந்து வரும் 'அமர் ஜவான் அணையா விளக்கு' நேற்று பக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டு இருக்கும் தேசிய போர் நினைவுச் சின்ன விளக்குடன் ஐக்கியமானது.
உலகில் 1914 முதல் 1921 வரை நடந்த முதல் உலகப்போரில் மாண்டுபோன 70,000 வீரர்களின் நினைவாக இந்தியா கேட் 1931ல் அமைக்கப்பட்டது. பிறகு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1971ல் அங்கு அமர் ஜவான் அணையா விளக்கை ஏற்றி வைத்தார்.
அமர் ஜவான் அணையா விளக்கு, முதல் உலகப்போரின் 50வது ஆண்டை நினைவுகூரும் வகையில், அருகே இருக்கும் போர் நினைவுச்சின்ன விளக்குடன் ஐக்கியமாகும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்தப் போர் நினைவுச்சின்னம் இந்தியா கேட் பகுதிக்கு அருகே 'சி ஹெக்ஸகன்' பகுதியில் 2019ல் கட்டப்பட்டது.
இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு உயிர்நீத்த 22,550 ராணுவ வீரர்களின் பெயர்கள் இந்தச் சின்னத்தில் பொறிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் 50 ஆண்டு கால அணையா விளக்கு தேசிய போர் நினைவுச்சின்ன விளக்குடன் ஐக்கியமானது.
இதனிடையே, 50 ஆண்டுகால அணையா விளக்கை அணைத்துவிட்டார்கள் என்று மத்திய அரசை கடுமையாகக் குறைகூறி இருக்கும் காங்கிரஸ், அந்த விளக்கை மீண்டும் ஒளிரச் செய்வோம் என்று டுவிட்டரில் சூளுரைத்தது.
ஒரு சிலரால் நாட்டு பக்தியையும் தியாகத்தையும் புரிந்துகொள்ள இயலாது என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி காட்டமாகத் தெரிவித்தார்.
இதர கட்சியினர் பலரும் இவ்வாறு குறைகூறி இருக்கிறார்கள்.
இந்நிலையில், அதற்கு விளக்கம் அளித்த மத்திய அரசு, 50 ஆண்டுகால அணையா விளக்கை அணைக்கவில்லை என்றும் அது போர் நினைவுச்சின்ன விளக்குடன் ஐக்கியமாகி இருக்கிறது என்றும் தெரிவித்தது.