சென்னை: சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்ற 'கலைஞர் கருணாநிதி தமிழ் செம்மொழி விருது' வழங்கும் நிகழ்வில், தமிழறிஞர்கள் 10 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்கிச் சிறப்பித்தார்.
கடந்த 2010 முதல் 2019ஆம் ஆண்டுவரையில் விருது பெறத் தேர்வானவர்களுக்கு தலா பத்து லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையும் பாரட்டுச் சான்றிதழுடன் கலை ஞரின் சிலையும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து பேசிய முதல்வர், தமிழை ஆட்சி மொழியாக உயர்த்துவதற்கு குரல் கொடுப்போம் என்றார்.
தொன்மையான மொழியான தமிழ், தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாகத் திகழ்வதாகவும் தமிழ் என்றாலே இனிமைதான் எனவும் புகழாரம் சூட்டினார்.
தமிழ் எந்த மொழியில் இருந்தும் கடன் வாங்கி உருவான கிளை மொழி அல்ல என்பதைச் சுட்டிக்காட்டிய முதல்வர், தமிழில் இருந்துதான் பல மொழிகள் உருவாகியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
பண்பாட்டின் அடையாளமாக இருக்கும் தமிழ்மொழியை பேசும்போது இனிமையாக உள்ளதாகவும் தமிழ் மொழி நமக்கு பெருமை தருவதாகவும் கூறினார்.