மும்பை: அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் சிக்கி இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
மும்பையின் டார்டியோ பகுதியில் அமைந்துள்ளது அந்த 20 மாடிகள் கொண்ட கமலா குடியிருப்பு.
நேற்று காலை அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் 18வது தளத்தில் திடீரெனத் தீ பற்றியது. அங்கு வசிப்பவர்கள் சுதாரிப்பதற்குள் சில நிமிடங்களில் அந்த தளம் முழுவதும் தீ மளமளவென வேகமாகப் பரவியது. அங்கிருந்த ஒரு வீட்டில் சமையல் எரிவாயு உருளை வெடித்துச் சிதறியதால் நிலைமை மேலும் மோசமடைந்தது.
இந்நிலையில், தகவல் அறிந்து தீயணைப்புத் துறையைச் சேர்ந்த 13 வாகனங்கள் அங்கு விரைந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை நிலவரப்படி, இந்த விபத்தில் ஏழு பேர் பலியாகிவிட்டதாகவும் இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி தலா ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்.