சுதாஸகி ராமன்
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானை உலுக்கிய கடுமையான நிலநடுக்கமும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட ராட்சத சுனாமி அலைகளும் உண்டாக்கிய சேதத்திலிருந்து மீண்டுவர ஜப்பானிய மக்கள் இன்றும் பாடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட ஜப்பானின் வடகிழக்குக் கடலோரப் பகுதிகளில் வாழ்ந்தவர்களின் இன்னல்களையும் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும் படிப்பினையாகக் கொள்ளும் அரிய வாய்ப்பை ரிபப்ளிக் பலதுறை தொழிற்கல்லூரி மாணவர்கள் சிலர் அண்மையில் பெற்றனர். இதுவரை ஜப்பானியர்களின் மீட்பு முயற்சிகளுக்கு சிங்கப்பூர் செஞ் சிலுவைச் சங்கத்தின் உதவித் திட்டங்கள் எவ்வாறு கைகொடுத்துள்ளன என்பதை ஆவணப்படுத்த எண்ணிய சங்கம், ஒன்பது மாணவர்களை அந் நாட்டுக்கு அனுப்பி வைத்தது.
ஜப்பான் இரட்டை அசம்பாவிதங்களின் ஐந்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக அடுத்த மாதத்தில் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் ஏற்பாடு செய்யவிருக்கும் கண்காட்சியில் இந்த மாணவர்களின் படைப்புகளும் இடம் பெறும். ஜப்பானில் எடுத்த புகைப்படங்களை நூலாகத் தொகுத்து அத்துடன் தாங்கள் தயாரித்த காணொளியையும் அந்தக் கண்காட்சியில் வெளியிடுகின்றனர் இம்மாணவர்கள். இந்தப் பணியில் கடந்த ஓராண்டாக ஈடுபட்டு வரும் அம்மாணவர்கள் தகவல் தொடர்புத் துறையில் பயில்கின்றனர். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்ட மாணவர்களும் இரு விரிவுரையாளர்களும் மோசமாகப் பாதிப்படைந்த ஃபுக்குஷிமா, மியாகி, இவாட்டே பகுதிகளின் ஏழு நகரங்களுக்குச் சென்று அங்கிருந்த நிலவரத்தை ஆவணப்படுத்தினர்.
சோமா நகர மேயர் ஹிடெகியோ டாச்சியாவிடம் (இடது) புதிய பொது வீடமைப்பு மேம்பாட்டுத் திட்டம் குறித்து கேட்டறியும் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள், ஆசிரியர் குழு. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி