ஜம்மு: காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து பாரதிய ஜனதாவும் மக்கள் ஜனநாயக கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. முதலமைச்சராக மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி) தலைவர் முப்தி முகம்மது சயீது பதவியேற்றார். கடந்த ஆண்டு இறுதியில் முதலமைச்சர் முப்தி முகம்மது சயீது நோய்வாய்ப்பட்டு மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து பி.டி.பி. கட்சியின் புதிய தலைவராக முப்தி முகம்மது சயீதின் மகள் மெகபூபா தேர்ந்வு செய்யப்பட்டார்.
அவர் முதலமைச்சர் பதவி ஏற்க பாஜக ஆதரவு தெரிவித்தது. ஆனால் மத்திய அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று கூறி மெகபூபா முதல்வர் பதவி ஏற்க தாமதம் செய்தார். பாஜக சமரசம் செய்தும் அவர் பிடிவாதம் நீடித்தது. இதனால் காஷ்மீரில் கடந்த மாதம் 8ஆம் தேதி அதிபர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. மெகபூபா பிடிவாதம் தொடர்ந்து நீடித்ததால் காஷ்மீரில் பா.ஜ.க - பி.டி.பி. கூட்டணி நீடிக்குமா என்ற கேள்விக்குறி எழுந்தது. எனவே காஷ்மீரில் மீண்டும் தேர்தல் நடைபெறக்கூடும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் பாஜக, பிடிபி ஆகிய கட்சிகளுக்கு இடையே மீண்டும் சுமூக உறவு ஏற்பட்டுள்ளது. பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் மாதவ் நேற்று முன் தினம் மாலை திடீரென டெல்லியில் இருந்து காஷ்மீர் சென்றார்.
மாலை 5 மணிக்கு ஸ்ரீநகர் சென்ற அவர் நேராக மெகபூபா வீட்டுக்குச் சென்றார். அங்கு அவரும் மெகபூபாவும் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தினர். மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை சுமார் 2 மணி நேரம் அவர்களது பேச்சுவார்த்தை நீடித்தது. 7.40-க்கு மெகபூபா வீட்டில் இருந்து மாதவ் புறப்பட்டுச் சென்றார். அவரும் மெகபூபாவும் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்க மறுத்துவிட்டனர். மாதவ் - மெகபூபா இடையே நடந்த பேச்சுவார்த்தை வெற்றி பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. மீண்டும் பா.ஜ.க. - பி.டி.பி. கூட்டணி ஆட்சியை அமைக்க மெகபூபா தன் பிடிவாதத்தை கைவிட்டு சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று தெரிகிறது.