அம்மாவின் தூண்டுதலால் யோகா பயிற்சியை 23 வயது விக்நோப் சக்திவேல், ஒரு விளையாட்டாக மேற்கொள்ளத் தொடங்கினார். ஆனால், அதுவே நாளடைவில் அன்றாட நடவடிக்கையாக அவருக்கு மாறிவிட்டது.
ஐந்தாண்டுகளாக விக்நோப் யோகா செய்து வருகிறார்.
கடந்த 2017ல் வேதாத்ரி மகரிஷியின் எளியமுறை குண்டலினி யோகாவைத் தன் தாயாருடன் கற்கத் தொடங்கினார் விக்நோப்.
இவ்வகை யோகாவில் தியானம், காயகல்பம், அகத்தாய்வுப் பயிற்சி, எளிய உடற்பயிற்சிகள் ஆகியவை கற்றுத் தரப்படும்.
யோகா செய்யத் தொடங்கியதுமுதல், தன்னிடம் பொறுமை அதிகரித்ததையும் மன அமைதியும் தெளிவும் பிறந்ததையும் கவனித்தார் இளையர் விக்நோப்.
மேலும், எளிய உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதால் தனது உடலின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
யோகாவில் பலவகை உண்டு. அவரவர் தங்களது தேவைக்கும் உடல் நிலைக்கும் ஏற்ற பயிற்சிகளைத் தேர்வு செய்வது முக்கியம். முறையான பயிற்சியாளரிடம் கற்றுக்கொள்வதும் அவசியமாகும்.