வேலூர்: வேலூர் மாவட்டம் ஜோலார் பேட்டை ஒன்றியம் சின்னூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் சின்ன தம்பி (படம்). இவர் நேற்று முன்தினம் காலை வகுப்பறையில் மது குடித்தார். பின்னர் ஒரு மாணவனை அழைத்து வீட்டிற்கு சென்று வேர்க்கடலை வாங்கி வருமாறு வற்புறுத்தி உள்ளார். மாணவன் வீட்டிற்குச் சென்று தனது தாயிடம் வறுகடலை வாங்கிச் சென்றான். இதனை அறிந்த ஊர்மக்களும் ஊராட்சிமன்றத் தலைவர் லதாவும் பள்ளிக்குச் சென்றனர்.
தலைமை ஆசிரியர் மது குடித்துக்கொண்டிருந்த வகுப் பறையைப் பூட்டிய அவர்கள் சம்பவம் பற்றி உதவி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த உதவி தொடக்கக்கல்வி அலுவலர் தென்னவன் விசாரணை நடத்தினார்.
மது குடித்திருப்பது உறுதி செய்யப்பட்டதால் தலைமை ஆசிரியர் சின்னதம்பி கட்டாய விடுப்பில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலுவலர் தென்னவன் தெரிவித்தார்.