மெதுவடைந்து வந்த பொருளியல், கடுமையான வாடகைச் சந்தை ஆகிய காரணங்களால் வீட்டுக் கடனைக் கட்ட முடியாமல் கடந்த ஆண்டு அதிக வீடுகள் ஏலத்துக்கு வந்தன. 2014ஆம் ஆண்டு எண் ணிக்கையுடன் ஒப்புநோக்க இந்த எண்ணிக்கை கடந்தாண்டு கிட்டத்தட்ட 80 விழுக்காடு அதிகம் என்று 'DTZ' ஆய்வு நிறுவனம் கூறி உள்ளது. 2015ஆம் ஆண்டில் 87 வீடுகள் ஏலத்துக்கு வந்தன. 2014ல் இந்த எண்ணிக்கை 47 ஆக இருந்தது. சொத்துச் சந்தை வளர்ச்சி அடைந்த 2012ல் வீட்டுக்கடன் கட்ட முடியாமல் ஏலத்துக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கை ஒன்பது மட்டுமே. கடந்தாண்டில் அதிக வீட்டு உரிமையாளர்கள் வீட்டை விற்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. 2014ஆம் ஆண்டில் 77 ஆக இருந்த அந்த எண்ணிக்கை 2015ல் 135ஆக உயர்ந்தது.
சென்றாண்டு அதிக தரை வீடுகள், பெரிய அடுக்குமாடி வீடுகள் ஏலப் பட்டியலிடப் பட்டன என்று 'DTZ' ஆய்வு நிறுவனம் தெரிவித்தது. 2014ஆம் ஆண்டில் 39ஆக இருந்த ஏலப் பட்டியலிடப்பட்ட தரை வீடுகளின் எண்ணிக்கை 2015ல் 53ஆக உயர்ந்தது. 2,000 சதுர அடிக்கும் அதிக பரப்பளவு கொண்ட அடுக்கு மாடி வீடுகளின் எண்ணிக்கை 17ல் இருந்து 40ஆக உயந்துள்ளது. பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களால் மேலும் அதிக வீடுகள் ஏல விற்பனைக்கு வரும் என்று 'DTZ' ஆய்வு நிறுவனம் கூறியது. "பங்குச் சந்தையின் நிலவரப் படி ஏற்ற இறக்கங்கள் காரணமாக வீட்டு உரிமையாளர்கள் தங்கள் நிதி நிலையைச் சமாளிக்க வேண்டியிருக்கும் என்பதால், மேலும் அதிக வீடுகள் ஏலத்துக்கு வரும். "இதனால் வீடு வாங்க முயல்வோருக்கு கட்டுப்படியாகும் விலையில் அதிக வீடுகள் கிடைக்க வாய்ப்புண்டு," என்று அந்நிறுவனத்தின் ஆய்வுத் தலைவர் டாக்டர் லீ நைஜியா கூறினார்.