வேலையிட மரணங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து 'சேஃப்டி டைம்-அவுட்' எனும் தேவைப்படும்போது தற்காலிகமாக வேலையை நிறுத்தும் நடைமுறையை நடப்புக்குக் கொண்டுவருவது குறித்து மனிதவள அமைச்சு வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றத்துடன் இணைந்து செயல்படுகிறது.
சென்ற மாதம் எட்டுப் பேர் வேலையிட விபத்துகளில் மரணமடைந்தனர். கடந்த புதன்கிழமை மட்டும் மூவர் மாண்டனர்.
பாதுகாப்பு வேலை நிறுத்த நடைமுறை வரையப்படும்போது விவரங்கள் வெளியிடப்படும் என்று மனிதவள அமைச்சு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தது.
சென்ற ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு சென்ற மாதம்தான் ஆக அதிகமானோர் வேலையிடங்களில் மரணமடைந்தனர். சென்ற ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 11 வேலையிட மரணங்கள் பதிவாயின. 2016ஆம் ஆண்டிற்குப் பிறகு வேலையிடங்களில் ஒரு மாதத்தில் அத்தனை பேர் மாண்டது அதுவே முதல்முறை.
இவ்வாண்டு இதுவரை 17 வேலையிட மரணங்கள் பதிவாகிவிட்டன. சென்ற ஆண்டு முழுவதும் 37 பேர் வேலையிட விபத்துகளில் உயிரிழந்தனர்.
2020ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 30ஆகப் பதிவானது. 2019ன் எண்ணிக்கை 39.
"அடிப்படை அபாயக் கட்டுப்பாடுகள், வேலைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டிருந்தால் பெரும்பாலான விபத்துகளைத் தவிர்த்திருக்கலாம். அதனால் இது கவலை தரும் ஒன்று," என்று மனிதவள அமைச்சின் வேலைப் பாதுகாப்பு, சுகாதார சோதனைக் குழுவின் இயக்குநர் சபாஸ்டின் டான் கூறினார். வேலையிடப் பாதுகாப்பிற்கும் சுகாதாரத்திற்கும் முன்னுரிமை வழங்கும் நோக்குடன் தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டார்.
கடந்த வியாழக்கிழமையன்று புதிய வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார இயக்கம் தொடங்கப்பட்டது. இந்தக் காலாண்டில் 25 விழுக்காடு கூடுதலான வேலையிடச் சோதனைகளை நடத்த கூடுதல் வளங்கள் ஒதுக்கப்பட்டு வருவதாகத் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது தெரிவித்தார்.