Rep with steps எனப்படும் நடைப் பயிற்சிப் போட்டியில் 27 உயர்நிலைப்பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகளைச் சேர்ந்த 20,000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கெடுக்கின்றனர். இந்தப் போட்டி நேற்று அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைக்கப்பட்டது. தேசிய அளவில் நடத்தப்படும் இந்த நடைப் பயிற்சியில் பங்கேற்க சுகாதார மேம்பாட்டு வாரியத்தால் ஏற்பாடு செய்யப்படும் Rep with Steps போட்டி மூலம் பள்ளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் தேதி தொடங்கியதிலிருந்து இந்தப் போட்டியில் தீவு முழுவதிலும் ஏறத்தாழ 156,000 பேர் பங்கெடுத்துள்ளனர்.
போட்டியில் பங்கெடுக்கும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அவர்கள் எத்தனை அடி எடுத்து வைக்கின்றனர் என்பதைப் பதிவு செய்ய சாதனங்கள் தரப்பட்டன. சராசரியாக ஆக அதிக அடிகள் எடுத்து வைக்கும் எட்டு பள்ளிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்குப்படும். உட்குரோவ் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தொடக்க விழாவில் சுகாதார துணை அமைச்சர் சீ ஹோங் டாட் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார் (படம்). ஆரோக்கியமான வாழ்க்கைமுறை வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என்பதை அவர் மாணவர்களுக்கு வலியுறுத்தினார். போட்டி முடிந்த பிறகும் ஆரோக்கியமாகவும் துடிப்புடனும் இருக்கும்படி திரு சீ மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்.
தேசிய நடைப் பயிற்சி சவால் பெரிய அளவில் நடத்தப்படுவது குறித்து சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு சீ யோங் காங் மேற்கோள் காட்டினார். இப்படி ஒரு பெருந்திட்டம் இருப்பது உலகளாவிய மருத்துவ வரலாற்றில் இதுவே முதல்முறை என்று அவர் தெரிவித்தார். Rep with Steps போட்டி கடந்த திங்கட்கிழமை அதிகாரபூர்வமாக தொடங்கியது. இப்போட்டி அடுத்த இரண்டு மாதங்களுக்கு நடத்தப்பட்டு ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி நிறைவடையும்.