கோவை: அன்னியச் செலாவணி வர்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்தால் பெரும் லாபம் காணலாம் என்று ஆசை வார்த்தைகளைக் கூறி பலரிடம் பணம் பெற்று ரூ.400 கோடி மோசடி செய்த தம்பதியரை கோவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் சுந்தராபுரத்தைச் சேர்ந்த விமல் குமார், ராஜேஸ்வரி தம்பதியர் 'ஆல்ஃபா பாரெக்ஸ் மார்க்கெட்ஸ்' என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று நிதி முதலீடு, அன்னியச் செலாவணி வர்த்தகம் தொடர்பாக விளக்கக்கூட்டங்களை நடத்தி வந்த இவர்களுக்கு முதலீடு செய்வதில் ஆர்வம் கொண்டுள்ள ஏராளமானோர் அறிமுகமாகினர்.
அவர்களிடம், ஒரு லட்சம் முதலீடு செய்தால், பத்து மாதங்களுக்கு தொடர்ந்து ரூ.18,000 வழங்கப்படும் என்று இத்தம்பதியர் தெரிவித்துள்ளனர்.
மேலும், முதலீட்டாளர்களை அறிமுகப்படுத்தினால் பத்து மாதங்களுக்கு ரூ.2,000 தொடர்ந்து வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
இந்த அறிவிப்புகளால் கவரப்பட்ட ஏராளமானோர், இத்தம்பதியரை நம்பி பல லட்சம் ரூபாய் முதலீடு செய்யத் தொடங்கினர்.
குறுகிய லாபத்தில் 400 கோடி ரூபாய் அளவு திரட்டிய விமல் குமார், ராஜேஸ்வரி தம்பதியர், தாங்கள் அறிவித்தபடி, முதலீட்டாளர்களுக்கு அசல், வட்டி, ஊக்கத்தொகை என எதுவும் தராமல் திடீரென தலைமறைவாகினர்.
அவர்களது வீடு, அலுவலகம் பூட்டியிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த 250க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் காவல்துறையிலும் கோவை ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் அளித்தனர்.
இதையடுத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், விமல் குமார் தம்பதியர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
தலைமறைவான பின்னரும் 'மிஸ்டர் மணி' என்ற 'யூடியூப்' சேனலை விமல் குமார் தொடர்ந்து நடத்தி வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.