கியவ்: பீரங்கி, ஏவுகணை தாக்குதல்கள், விமானங்கள் மூலம் குண்டுவீச்சு என உக்ரேனின் கிழக்கில் உள்ள டோன்பாஸ் வட்டாரத்தில், ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளதாக உக்ரேன் ராணுவம் தெரிவித்துள்ளது.
டோன்பாசில் உள்ள லுஹான்ஸ்க் பகுதியில், ரஷ்யா நடத்திய தாக்குதலில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதன் ஆளுநர் செர்ஹி கெய்டாய் தெரிவித்தார்.
செவெரோடோனெட்ஸ்க் நகரில் ரஷ்யாவின் தாக்குதல் முறியடிக்கப்பட்டிருந்தாலும் 12 பேர் கொல்லப்பட்டவதாகவும் அவர் சொன்னார்.
தொழில் நகரமான டோன்பாஸை ரஷ்யப் படைகள் முற்றிலும் அழித்துவிட்டதாக உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி சொன்னார்.
தம்மால் இயன்ற அளவுக்கு உக்ரேனின் கட்டமைப்புகளைச் சேதப்படுத்தவும் உக்ரேன் மக்களைக் கொல்லவும் ரஷ்யப் படைகள் முயல்வதாகவும் அவர் சொன்னார். ரஷ்ய இனப்படுகொலையை அரங்கேற்றுவதாக அவர் மீண்டும் சொன்னார்.
"ரஷ்யா எங்களுக்கு மேலும் அழுத்தம் கொடுக்க முயல்கிறது.
"டோன்பாஸ் நகரம் நரகமாக காட்சியளிக்கிறது.
"மத்திய உக்ரேனின் ஒடேசா பகுதியிலும் ரஷ்யா தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது," என்றார் அவர்.
இந்நிலையில், டோன்பாஸ் வட்டாரத்தின் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஆனாலும் கடந்த இரண்டு வாரங்களில் கார்கிவ் அருகே 23 பகுதிகளை மீண்டும் தாம் கைப்பற்றிவிட்டதாக உக்ரேன் கூறுகிறது.
இதற்கிடையே, இந்தப் போரின் காரணமாக அனைத்துலக அளவில் உணவு நெருக்கடி ஏற்படும் என்றும் அது பல ஆண்டுகளுக்கு நீடிக்கக்கூடும் என்றும் ஐநா எச்சரித்துள்ளது.
உக்ரேன் துறைமுகங்களை ரஷ்யா மறித்துள்ளதால் அங்கிருந்து கோதுமை, சோளம், சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதியாகவில்லை.
இதன் காரணமாக அவற்றுக்கான மாற்று உணவுப் பொருளின் விலை, உலகளவில் சென்ற ஆண்டைவிட கிட்டத்தட்ட 30 விழுக்காடு உயர்ந்துள்ளதாக ஐநா சொன்னது.
இதனால் கிட்டத்தட்ட 250 மில்லியன் பேர் பட்டினியால் வாடும் நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.