கௌஹாத்தி: வடகிழக்கு மாநிலங்களிலும் பீகாரிலும் நீடித்து வரும் கனமழையால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவு, மின்னல் தாக்கி இதுவரை 58 பேர் உயிரிழந்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அசாம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், சிக்கிம், திரிபுரா, நாகாலாந்து ஆகிய ஏழு வடகிழக்கு மாநிலங்களில் கனமழை நீடித்து வருகிறது.
இதேபோல் பீகார், மேற்குவங்கம் உள்ளிட்ட கிழக்கு மாநிலங்களையும் மழை விட்டுவைக்கவில்லை. அசாமில் மட்டும் 800,000 பேர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநில அரசுகள் மீட்பு, நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தி உள்ளன.
அசாம் நிலவரம்
அசாமில் உள்ள 35 மாவட்டங்களில் தற்போது 32 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவுச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 14 பேர் பலியானதை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது.
மாநிலம் முழுவதும் 234 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, அசாமில் நாளை வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோரப் பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரக் கிராமங்கள் பல வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
இந்நிலையில் மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் சேதங்கள் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
அருணாச்சலப் பிரதேசத்தில் வெள்ளம், நிலச்சரிவால் எட்டு பேரும் மேகாலயாவில் மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் பலி எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது. நிலச்சரிவால் வடகிழக்கு மாநிலங்களில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. பல பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
பீகார் நிலவரம்
பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் 16 மாவட்டங்களை மழை புரட்டிப் போட்டுள்ளது. அங்கு ஒரே நாளில் மின்னல் தாக்கி 33 பேர் மாண்டுவிட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மழை, வெள்ளத்தால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அம்மாநில அரசு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. மின்னல் தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அசாமில் நடைபெற்று வரும் மீட்புப்பணிகள் மனநிறைவு தருவதாகவும் கூறியுள்ளார்.
மின்னல் தாக்கி இறப்போர் அதிகரிப்பு
இதற்கிடையே, நாட்டில் மின்னல் தாக்கி பலியாவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2018ஆம் ஆண்டு 2,356 பேரும் 2019ஆம் ஆண்டு 2,876 பேரும் மின்னல் தாக்கி பலியாகினர். மேலும், 2001 முதல் 2018ஆம் ஆண்டு வரை 42,500 பேர் மாண்டுவிட்டனர்.
வடகிழக்கு மாநிலங்களிலும் பீகாரிலும் தொடர் மழை; அசாமில் 800,000 பேர் பாதிப்பு