தொடக்கப் பள்ளி இறுதித் தேர்வு (பிஎஸ்எல்இ) வாய்மொழித் தேர்விற்குத் தயாராகும் குழந்தைகள் வாய்விட்டுச் சத்தமாகப் படித்துப் பழக வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கற்றல் முறைகளைக் கவனித்து, அதற்கு ஏற்ப அவர்களுக்குக் கற்றல் சூழலை ஏற்படுத்தித் தரவேண்டும்.
இவை, கடந்த சனிக்கிழமை நடந்த பிஎஸ்எல்இ தேர்விற்கு ஆயத்தமாவது தொடர்பில் பெற்றோர்களுக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பெற்றோர்களிடம் தெரிவிக்கப்பட்ட உதவிக்குறிப்புகளில் சில.
கல்வி அமைச்சின் கல்வி (பாடத்திட்டம்) இணைத் தலைமை இயக்குநர் செங் செர்ன் வெய், புதிய அடைவுநிலை (AL) மதிப்பீட்டு முறை குறித்தும் உயர்நிலைப் பள்ளி மாணவர் குறித்தும் சுருக்கமாகக் கூறி, கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார்.
கணக்குப் பாடம் கடினமா?
பிஎஸ்எல்இ கணிதத் தேர்வு குறித்துப் பேசிய கணிதவியல் வல்லுநர் யீப் பான் ஹார், அப்பாடத்தில் அடிப்படைத்திறனை மாணவர்கள் வலுப்படுத்திக்கொள்வது முக்கியம் என்றார்.
கடினமான கணக்குகளுக்கு விடையளிப்பது குறித்து பெற்றோர்கள் கேட்டதற்கு, முன்னைய எடுத்துக்காட்டுகள் இல்லை என்பதால் அத்தகைய கேள்விகளுக்கு விடை அளிப்பது தொடர்பில் பயிற்சி செய்வது கடினம் என்றார் டாக்டர் யீப்.
"அத்தகைய கணக்குகள் அறிமுகமில்லாததுபோல் தோன்றினாலும், அவை பாடத்திட்டத்தில் இருந்துதான் கேட்கப்பட்டிருக்கும்; வழிமுறைகள் கற்றுத்தரப்பட்டிருக்கும்," என்றார் அவர்.
தங்கள் பிள்ளைகளின் கூட்டல், பெருக்கல் போன்ற அடிப்படைத் திறன்களை மீண்டும் பட்டைதீட்டுவது, அவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற உதவும் என்றும் அவர் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தினார்.
பயிற்சியால் பயன் விளையும்
உலக நடப்புகளைத் தெரிந்துகொள்ளச் செய்வது போன்ற உத்திகள், ஆங்கிலத் தேர்விற்குத் தயாராகும்போது, தங்களது சொந்தக் கருத்துகளை உருவாக்கிக்கொள்ள பிள்ளைகளுக்கு உதவும் என்றார் 'பிரிட்டிஷ் கவுன்சில்' மூத்த ஆசிரியர் போஸெனா ரூப்னிக்.
குறிப்பாகத் தம்மைப் பற்றியே அதிகம் சிந்திக்கும் குழந்தைகள், வாய்மொழித் தேர்விற்குத் தயாராகும்போது வாய்விட்டுச் சத்தமாகப் படித்துப் பழக வேண்டும் என்பது அவரது அறிவுரை.
"ஒரு கதையை அவர்கள் சத்தமாகப் படிக்கும்போது, சொல்லழுத்தம், ஒலி வேறுபாடு, சரளமாகப் பேசும் தன்மையுடன் வெவ்வேறு கதைமாந்தர்களுக்கு வெவ்வேறு குரலில் பேசுவதிலும் கவனம் செலுத்துவர். இதனால், தங்களின் குரல் எப்படி ஒலிக்கும் என்பதையும் அவர்கள் நன்கு அறிந்திருப்பர்," என்று திருவாட்டி ரூப்னிக் கூறினார்.
பிள்ளைகளை ஊக்குவிக்கவும்
குழந்தைகளை ஊக்குவித்தல், தேர்வு அழுத்தத்தை எதிர்கொள்ள அவர்களுக்கு உதவுதல் ஆகியவை தொடர்பில் உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்துகொண்டார் தேசிய கல்விக் கழகத்தின் மூத்த கல்வியியல் ஆய்வாளர் இங் ஈ லின்.
ஆதரவான இல்லச் சூழல் தேவை எனக் குறிப்பிட்ட டாக்டர் இங், அரையாண்டுத் தேர்வில் நல்ல தேர்ச்சி பெறாவிடினும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும் என்றார்.
"பெற்றோர்களாக, தேர்வு முடிவுகளை அறிந்தபின் நாம் ஆற்றும் எதிர்வினைகள் நம் பிள்ளைகளிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும், அதன்பின் அவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைப்பர் என்பதை உணர வேண்டும்," என்று திருவாட்டி இங் சொன்னார்.