நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ('என்டியு') தலைவரான 66 வயது பேராசிரியர் சுப்ரா சுரேஷ் (படம்), ஐந்தாண்டுப் பதவிக்காலத்துக்குப் பிறகு வரும் டிசம்பர் இறுதியில் பதவி ஓய்வு பெறவிருக்கிறார்.
அடுத்த தலைவரை அடையாளம்காணும் பொருட்டு குழு ஒன்று அமைக்கப்படும் என்று 'என்டியு' நேற்று தெரிவித்தது.
உலகெங்கும் நீடிக்கும் கிருமித்தொற்றின் தாக்கத்தால் முக்கிய குடும்ப நிகழ்வுகளில்கூட நெருங்கிய உறவினர்கள் ஒன்றுகூடுவது சாத்தியமில்லாமல் போய்விட்டதாக மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் அனுப்பிய மின்னஞ்சலில் பேராசியர் சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு பிறக்கவிருக்கும் முதல் பேரக்குழந்தையுடன் அருகில் இருந்து நேரம் செலவிடும் பேராவலில் தாமும் தமது துணைவியார் மேரியும் முன்னர் திட்டமிட்டதற்கும் முன்கூட்டியே அமெரிக்கா திரும்ப விரும்புவதாக அவர் கூறினார்.
1991ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் நான்காவது தலைவர் பேராசிரியர் சுப்ரா சுரேஷ். பல்கலையின் கல்வித்துறையில் ஆக உயர்ந்ததாகக் கருதப்படும் சிறப்புமிக்க பல்கலைக்கழகப் பேராசிரியர் எனும் பதவியை வகித்த முதல் பேராசிரியர் என்ற சிறப்பு அவரைச் சாரும்.
2013 முதல் 2017ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் கார்னெகி பல்கலைக்கழகத்தின் தலைவராகப் பணியாற்றிய அவர் அதற்கு முன்னர் அமெரிக்காவின் தேசிய அறிவியல் அறநிறுவனத்தின் இயக்குநராக அப்போதைய அதிபர் பராக் ஒபாமாவால் நியமிக்கப்பட்டார். புகழ்பெற்ற 'எம்ஐடி' பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரித் தலைவராகப் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு.
'என்டியு' சமூகத்தினருக்கு விடுத்த செய்தியில், உலகத்தரம் வாய்ந்த முன்னிலைப் பல்கலைக்கழகம் என்ற புரிதலோடு தாம் விடைபெறுவதாகக் கூறிய பேராசிரியர் சுரேஷ், அனைவரும் இணைந்து 'என்டியு'வின் அடித்தளத்தை வலுப்படுத்தியிருப்பதாகவும் அடுத்த தலைவர் அதனை மேலும் உயர்த்துவார் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
பேராசிரியர் சுரேஷின் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்த 'என்டியு'வின் அறங்காவலர் வாரியத் தலைவர் திருவாட்டி கோ சுவீ சென், இவரது தலைமைத்துவத்தின்கீழ் பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டத்தில் புத்தாக்கம், மின்னிலக்கத் தொழில்நுட்பம் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டதுடன் மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்கப்பட்டதாகக் கூறினார்.
2020ல் கொவிட்-19 கிருமிப்பரவலின்போது 'என்டியு பிரையாரிட்டிஸ் ஃபண்ட்' அறநிதிக்கு பேராசிரியர் சுரேஷும் அவரது துணைவியாரும் தனிப்பட்ட முறையில் 100,000 வெள்ளி நன்கொடை வழங்கினர்.
தமது பணிக்காலத்தில் 'என்டியு' ஆய்வாளர்களுடன் இணைந்து உலகளாவிய சஞ்சிகைகளில் சில ஆய்வுக்கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.
அவருக்கு வழங்கப்பட்ட மொத்தம் 19 கௌரவ டாக்டர் பட்டங்களில் ஏழு 'என்டியு' தலைவராகப் பணியாற்றிய காலகட்டத்தில் வழங்கப்பட்டவை.