புதுடெல்லி: டெல்லியிலும் பீகாரிலும் நிகழ்ந்த இரு வெவ்வேறு சம்பவங்களில் காவல் நிலையங்கள் தாக்கப்பட்டன.
கடந்த புதன்கிழமை கிழக்கு டெல்லியின் ஷாதரா பகுதி காவல் நிலையத்துக்குள் புகுந்த ஆடவர் மூன்றாவது மாடியில் பணியில் இருந்த ஐந்து காவலர்களை கத்தியால் தாக்கினார். அப்போது காவல் நிலையத்தில் 20 பேர் இருந்தனர்.
சம்பவத்தன்று அந்த ஆடவர் திடீரென காவல் நிலையத்துக்குள் நுழைந்து தமது கேமராவில் படம்பிடிக்கத் தொடங்க, அங்கிருந்த காவலர்கள் தடுத்துள்ளனர். அப்போது தன்னிடமிருந்த கத்தியால் தாக்கத் தொடங்கினார்.
பின்னர் அங்கிருந்து அவர் தப்பியோட முயன்றபோது, காவலர்கள் துரத்திச் சென்று பிடித்தனர்.
இதற்கிடையே, பீகார் மாநிலத்தில் உள்ள தோஸ்தியான் என்ற கிராமத்தில் மது அருந்துவிட்டு ரகளை செய்த மூன்று பேரைக் காவல்துறை கைது செய்தது.
ஆனால் இரவில் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையால் ஆவேசமடைந்த கைதானவர்களின் குடும்பத்தாரும் உறவினர்களும் அங்குள்ள காவல் நிலையத்துக்கு திரண்டு சென்று கற்களை வீசியதுடன் கம்புகளால் காவலர்களைத் தாக்கவும் செய்தனர். இதில் 19 காவலர்கள் காயமடைந்தனர். 55 பேர் மீது வழக்குப் பதிவானது.