கொழும்பு: இலங்கையில் குப்பைமேடு சரிந்து விழுந்ததில் உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொழும்பு அருகே வெள்ளிக்கிழமை குப்பைமேடு திடீரென்று சரிந்ததில் சுமார் 145 வீடுகள் அழிந்து விட்டதாகவும் பல கட்ட டங்கள் சேதம் அடைந்ததாகவும் அக் கட்டடங்கள் எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடிய நிலையில் இருப்பதாகவும் போலிசார் கூறினர். மலைபோல் குவிக்கப்பட்டிருந்த குப்பைமேடு சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து வெளியேற்றப் பட்ட 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளன. சுமார் 1,700 பேர் பள்ளிகளில் அமைக்கப் பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள தாகவும் மாற்று இடங்களில் அவர்களைத் தங்கவைக்க அரசாங்கம் முயன்று வருவதாகவும் பேரிடர் நிர்வாகக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குப்பைமேடு சரிந்துவிழுந்த இடத்தில் யாரேனும் சிக்கிக்கொண்டிருக்கிறார்களா என்பதைக் கண்டறிய ராணுவத்தினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் பேரிடரைத் தொடர்ந்து அப்பகுதியில் சூறையாடல் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகக் கூறப்படும் வேளையில் போலிசார் அங்கு பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளனர். படம் ஏஎஃப்பி