தவறான மதிப்பீடு, விபத்துகள் ஆகியவை தொடர் விளைவாக ஆசியான் நிலைத்தன்மையைப் பாதிக்கக்கூடியவை என்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டியது அவசியம் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உடனான சந்திப்பில் டாக்டர் விவியன் அவ்வாறு கூறினார்.
அமெரிக்க-சீன நல்லுறவின் அவசியத்தை வலியுறுத்திய அவர், இரு நாடுகளும் அவற்றுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை அமைதியான முறையில் தீர்த்துக்கொள்ளும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்புக்கு இடையே, நேற்று முன்தினம் டாக்டர் விவியன் அமைச்சர் வாங்கைச் சந்தித்ததாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
வட்டார, அனைத்துலக நிலவரங்கள் குறித்தும் தைவான் நீரிணையின் அண்மை நிலவரம் குறித்தும் இரு அமைச்சர்களும் கலந்துரையாடினர். சிங்கப்பூர் 'ஒரே சீனா' கொள்கை குறித்த தெளிவான, உறுதியான பார்வையைக் கொண்டிருப்பதாகவும் தைவானின் சுதந்திரத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.