சுதந்திர தினக் கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதி எனத் தகவல்
புதுடெல்லி: நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டங்களைச் சீர்குலைக்க பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவு முகமைகள் எச்சரித்த நிலையில், டெல்லியில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் பல்வேறு நாச வேலைகளுக்குத் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நாடு முழுவதும் அதிரடிச் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் மூலம் பெங்களூரு, கோவை, ஈரோடு பகுதிகளில் தங்கி, செயல்பட்டு வந்த பயங்கரவாதிகள் சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், டெல்லியில் இருந்தபடி பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி திரட்டிய மொஹ்சின் அகமது (படம்) என்ற பயங்கரவாதி சிக்கி உள்ளார். அவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் உறுப்பினர் என்பது தெரிய வந்துள்ளது.
டெல்லியில் உள்ள பாட்லா ஹவுஸ் பகுதியில் வசித்து வந்த அவரைப் பற்றி ரகசியத் தகவல் கிடைத்ததாகவும் அதன் பேரில் நடத்தப்பட்ட சோதனையின்போது அவர் சிக்கியதாகவும் தேசிய புலனாய்வு முகமை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவைச் சேர்ந்த மொஹ்சின் அகமது, ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாகப் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் என்றும் அவர் கிரிப்டோகரன்சி எனப்படும் மின்னிலக்க பண வடிவில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்காக பணம் திரட்டினார் என்றும் தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.
குறிப்பாக, சிரியா உள்ளிட்ட நாடுகளுக்கு அவர் அதிக அளவில் பணம் அனுப்பியுள்ளார். அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.