'திருட்டி விசிடி', 'ஆத்யன்' என்ற படங்களில் நடித்துள்ள சாக்ஷி அகர்வால் தற்போது 'கககபோ' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை பி.எஸ்.விஜய் இயக்கி வருகிறார். இந்தப் படம் கூடியவிரைவில் வெளிவரவுள்ளது. இப்படத்தில் சாக்ஷி ஒரு பாடலுக்கு நீச்சல் உடையில் காட்சியளிப்பார். நீச்சல் உடை அணிந்து நடிக்க சம்மதித்த சாக்ஷி, படத்தின் இயக்குநரிடம் ஒரு நிபந்தனையும் வைத்தாராம். படம் வெளியாவதற்கு முன் நீச்சல் உடை புகைப்படங்கள் செய்தித்தாள்களிலோ இணையத்திலோ வெளியிடக்கூடாது என்பதுதான் அந்த நிபந்தனை. ஆனால், நிபந்தனையை மீறி தற்போது அந்த நீச்சல் உடை படம் ஊடகங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறது.
இதைப் பார்த்த சாக்ஷி அகர்வால் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரை தொலைபேசியில் அழைத்து ஒரு பிடி பிடித்தாராம். கலங்கிப் போன அவர்கள் சாக்ஷிக்குப் பதிலளிக்கத் திணறினார்களாம். 'நீச்சல் உடை படத்தை ஊடகங்களிடம் தெரியாமல் கொடுத்து விட்டோம்' என்று சொல்லி சமாளித்த அவ்விருவரும் அந்தப் படத்தை திரும்ப பெற்றுக்கொள்ளப் போவதாக தயாரிப்பு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஊடகங்களிடல் வெளியான பின்னர் அந்த கவர்ச்சிப் படத்தைத் திரும்பப் பெறுவது எந்த வகையில் நியாயம் என்று கொதித்து விட்டாராம் சாக்ஷி. இனிமேல் கவர்ச்சியாக நடிக்க வேண்டி வந்தால் படம் வெளி வருவதற்கு முன்னர் அந்தப் படங்களை ஊடகங்களிடம் வெளியிடக்கூடாது என்று தயாரிப்பாளரிடமும் இயக்குநரிடமும் எழுதி வாங்கிக்கொண்டால் நல்லது என்று சாக்ஷிக்கு வேண்டப்பட்டவர்கள் அவரிடம் யோசனை தெரிவித்து உள்ளார்களாம்.