இவ்வாண்டின் தேசிய தின தின நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர்.
நுழைவுச்சிட்டுகள் கிடைக்காத பலர் அருகில் உள்ள பல இடங்களில் இருந்தவாறு நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்தனர்.
ரெட் லயன்ஸ் வான்குடை சாகசம், சிங்கப்பூர் ஆயுதப் படையின் பாவனை நிகழ்ச்சி, போர்விமானங்கள், ஹெலிகாப்டர்களின் சாகசம், இசை, நடனம், வாணவேடிக்கை என பல அம்சங்கள் பார்வையாளர்களை மகிழ்வித்தாலும் சிங்கப்பூரின் தேசிய கீதம் ஒலித்தபோதும் பற்றுறுதி கூறியபோதும் பார்வையாளர்கள் பலர் உணர்ச்சிவசப்பட்டனர்.
2017ஆம் ஆண்டிலிருந்து தேசிய தின அணிவகுப்பு நுழைவுச்சீட்டுகளைப் பெற முயன்று வந்தேன். இம்முறை என் மகன் அகிலுடன் அணிவகுப்பைக் கண்டதில் விவரிக்க முடியாத மகிழ்ச்சி.
- சிவப்பிரியா பரமசிவன், 37
தொலைக்காட்சி வழியாக இதுவரை தேசிய தினக் கொண்டாட்டங்களைக் கண்டுவந்த எனக்கு முதல்முறையாக நண்பர்களுடன் வந்து கொண்டாட்டங்களை நேரடியாகப் பார்ப்பதில் மகிழ்ச்சி. திரண்டிருக்கும் மக்கள் கூட்டத்தைக் காண நன்றாக உள்ளது.
- பெர்க்மான்டஸ், 31 (படத்தில் வலது ஓரம்)
குடும்பத்துடன் தேசிய தினத்தைக் கொண்டாட நாங்கள் வெகுநாள்களாக காத்திருந்தோம். எந்த தடையும் இல்லாமல் தேசிய தின அணிவகுப்பை கண்டு மகிழ பிற்பகல் இரண்டு மணியிலிருந்து நாங்கள் இங்கு அமர்ந்துள்ளோம். ஒவ்வோர் ஆண்டும் அணிவகுப்பைக் காணவரும் எங்களுக்கு இரண்டாண்டு கால இடைவெளிக்குப் பின்பு இவ்வாண்டு கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி.
- கற்பக விநாயகர், 42
கொவிட்-19 தொற்று பரவுவதற்குமுன் 2019இல் தனியாக வாண வேடிக்கையைக் கண்டு மகிழ்ந்த நான் இவ்வாண்டு என் குடும்பத்தினருடன் காணவேண்டும் என்று வந்திருக்கிறேன்
- அபிநந்தன் சோகுலே, 34
ஒவ்வோர் ஆண்டும் இங்கு வந்து நாங்கள் அணிவகுப்பைக் காண நுழைவுச்சீட்டுப் பெற முயல்வோம். ஆனால் நுழைவுச்சீட்டு எங்களுக்குக் கிடைக்கவில்லை. அதனால் இந்த ஆண்டு மரினா பே சேண்ட்ஸில் இருந்து அணிவகுப்பைக் கண்டு பரவசமடைந்தோம்.
-தங்கமணி, ஓய்வுபெற்ற ஊழியர்
என்னுடைய 66 வயது அம்மாவை அழைத்து வந்து அமர வைப்பதில் சிரமம் ஏற்படுமோ என்று கவலை கொண்டேன். ஆனால் இங்குள்ள தொண்டூழியர்கள் தாங்களாக முன்வந்து சக்கர நாற்காலி கொடுத்து உதவியதோடு இருக்கையிலும் அமர வைத்தனர். வயதானவர்களுக்கும் ஏதுவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது பாராட்டுதலுக்குரியது.
-பவானி பாலா, 42, அரசாங்க ஊழியர்.
தேசிய தின அணிவகுப்பில் முதல்முறையாக என் எட்டு வயது மகளுடன் கலந்துகொள்வது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. குழந்தைகள், மாணவர்கள், இளையர்கள் என வருங்காலத் தலைமுறையினர் இந்த அணிவகுப்பை நேரில் காண்பது அவர்களுக்குள் நாட்டுப்பற்றையும்
இன நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் வளர்க்கும். பள்ளி துணைத் தலைமை
- ஆசிரியர் சந்திரசேகரன், 59.
“தேசிய தின அணிவகுப்புக்கான நுழைவுசீட்டுகளை பெற முயன்றோம் அனால் எங்களுக்கு இவ்வாண்டு கிடைக்கவில்லை. கொவிட்-19 தொற்றுக்குப் பின்பு மக்களை ஒன்றாக ஓரிடத்தில் காண்பது நன்றாக இருக்கும் என எண்ணி தொலைக்காட்சியில் அணிவகுப்பை பார்ப்பதை தவிர்த்து விட்டு இங்கு வந்துள்ளோம். கொவிட்-19 தொற்றிலிருந்து நம் நாட்டை எந்தவித சிக்கலும் இல்லாமல் மீட்டெடுத்த நமது அரசாங்கத்தின் திறமைக்கு இந்த கொண்டாட்டம் சான்று.”
- நொவீந்திரன் குடும்பத்தினர்
அணிவகுப்பை முதல்முறையாக அம்மாவுடன் சேர்ந்து பார்த்தேன். தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும் நேரில் பார்த்தற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. முப்படை களைப் பிரதிபலித்த அங்கம் என் தேசிய சேவை காலத்தை நினைவூட்டியது.
- இராமநாதன் ராஜராஜ், 24, நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழக மாணவர்.