கரண்டியும் கையுமாக நின்று கொண்டிருந்த பிரபல சமையல் கலைஞர் விஷ்ணு மனோகர், திடீரென்று கையை மேலே உயர்த்தினார். இடைவிடாது தொடர்ந்த தனது சமையல் சாதனையை வெற்றிகரமாக முடித்துவிட்டதன் அடையாளம்தான் அது. நாக்பூரைச் சேர்ந்த விஷ்ணு மனோகர், தொடர்ந்து 53 மணி நேரம் சமையல் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி காலை 8 மணிக்குச் சமையல் செய்யத் தொடங்கியவர் தொடர்ந்து 53 மணி நேரம் நடுவர்கள் முன்னிலையில் பல்வேறு சமையல் வகைகளைச் செய்து காட்டி அசத்தியதுடன் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் பக்கோடா செய்து அதனை நடுவர்களிடம் தந்துவிட்டு தனது சாதனை முயற்சியை முடித்துக்கொண்டார்.
இதற்கு முன்னர் தொடர்ந்து 43 மணி நேரம் சமையல் செய்ததே கின்னஸ் சாதனையாக இருந்துவந்தது. இந்நிலையில் அதனைவிட 10 மணி நேரம் கூடுதலாக சமையல் செய்து சாதனை படைத்துள்ளார் விஷ்ணு மனோகர். "என்னால் இன்னும் பத்து மணி நேரம் கூட தொடர்ந்து சமையல் செய்யமுடியும்," எனக் கூறியுள்ள விஷ்ணு, இச்சாதனையை அன்னபூரணி அம்மனுக்குச் சமர்ப்பிப்பதாகக் கூறியுள்ளார்.