காயத்திரி காந்தி
தேசிய தினத்தன்று தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம், சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிக்கும் இரண்டு சாதனைகளைப் படைக்கும் முயற்சியில் ஈடுபட்டது.
நாடு முழுவதும் உள்ள 1330 பேருந்து நிறுத்தங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு திருக்குறள் என மொத்தம் 1330 திருக்குறள்களையும் கழகத்தின் தொண்டூழியர்கள் வாசித்தனர். மேலும் தேசிய தின வாழ்த்துச் செய்திகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர்கள் கூறினர்.
வள்ளுவத்தைப் போற்றி அதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதே இம்முயற்சியின் நோக்கம் என்று கழகத்தின் தலைவர் மு. ஹரிகிருஷ்ணன் கூறினார்.
தேசிய தினத்தன்று காலை ஏழு மணிக்கு பீட்டி சாலையிலுள்ள சிண்டா வளாகத்தில், இந்த முயற்சியைத் தொடங்கிவைத்தார் சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன்.
கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் வரை தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், வெயிலையும் பொருட்படுத்தாமல் தொண்டூழியர்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பேருந்து நிறுத்தங்களுக்குச் சென்று சாதனை நடவடிக்கைகளில் பங்கெடுத்தனர்.
"இளையர்கள் தமிழில் பேசவும் குடும்பத்தோடு சேர்ந்து செயல்படவும் இந்நிகழ்ச்சி ஒரு தூண்டுதலாக அமைந்தது.
"பொது இடத்தில் கூச்சமின்றி திருக்குறளை வாசித்தது, தேசிய தின வாழ்த்துகளைக் கூறியது ஆகியவற்றின் மூலமாக இளையர்கள் வீட்டிலும் தமிழில் பேசவேண்டும் என்ற உணர்வை வளர்த்துக்கொண்டனர்," என்று திரு ஹரிகிருஷ்ணன் கூறினார். மூன்று வயதுக் குழந்தை முதல் 83 வயது முதியவர் வரை இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
நண்பகல் 12 மணிக்கு திரு ஹரிகிருஷ்ணன், திரு அன்பரசு இருவரின் வாழ்த்துச் செய்திகளுடன் கடந்த 57 ஆண்டு கால சிங்கப்பூரின் முக்கிய நிகழ்வுகளைத் தொகுப்பாக வாசிக்கும் நேரலையை, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திருமதி லீலாராணி வழி நடத்தினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிங்கப்பூர் சாதனைகள் புத்தக நிறுவனத் தலைவர் ஓங் எங் ஹுவாட், பங்கேற்றோரின் தமிழ் உணர்வு தன்னை மிகவும் கவர்ந்ததாகக் கூறினார்.