சென்னை: கணவரால் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படும்போது அவரை வீட்டில் இருந்து வெளியேற்றினால் அமைதி நிலவும் என்றால், அதற்கான உத்தரவை நீதிமன்றங்கள் தயங்காமல் பிறப்பிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விவாகரத்து கோரிய மனைவி யும் குழந்தைகளும் வீட்டில் நிம்மதி யாக வாழவேண்டும் எனக் கூறி, கணவரை வீட்டைவிட்டு வெளி யேற்ற நீதிபதி உத்தரவிட்டார்.
பெண் வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்திருந்த மனுவில், தொழிலதிபரான எனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
கணவரை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று தான் மனுதாக்கல் செய்ததாகவும் ஆனால், "இருவரும் ஒரே வீட்டில் இருந்துகொள்ளலாம். அதேநேரம் மனைவியைக் கணவர் துன்புறுத்தக் கூடாது," என்று குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்து கணவரை வீட்டைவிட்டு வெளியேற்ற உத்தரவிடுமாறும் அவர் கோரியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, கணவரால் அச்சுறுத்தல் இருப்பதாக பெண் அச்சம் தெரிவித்துள்ள நிலையில், "ஒரே வீட்டில் இருக்கலாம், ஆனால், துன்புறுத்தக் கூடாது," என நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனக் குறிப்பிட்டு, குடும்ப நல நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மனுதாரரான வழக்கறிஞரின் கணவர் இரு வாரங்களில் வெளியேறவேண்டும் என்றும் இல்லையேல் காவல்துறை உதவியோடு வெளியேற்றவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மனுதாரரின் கணவரின் நடவடிக்கைகள் சகித்துக்கொள்ள முடியாத நிலையில் உள்ளதாகக் கூறிய நீதிபதி, ஒரு பெண் சுதந்திரமாக வாழவும் தனது பணிகளை மேற்கொள்ளவும் அந்தப் பெண்ணின் கணவர் இடையூறு கொடுத்து வந்தால் அது மோசமாக இருக்கும் என்றும் கூறினார்.
கணவரால் வீட்டில் அடிக்கடி பிரச்சினை ஏற்படும் என்ற சூழலில் மனைவியை நிரந்தர அச்சத்தில் வைக்கமுடியாது எனவும் குடும்பத்தில் அமைதி நிலவ கணவரை வெளியேறும்படி உத்தரவிடலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.