ஆண்டிறுதியில் வெளிநாட்டுப் பயணம் செல்லத் திட்டமிடும் சிங்கப்பூரர்களை இப்போதே பாஸ்போர்ட் எனப்படும் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும்படி குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
காலாவதியான அல்லது ஆறு மாதங்களுக்கும் குறைவான செல்லுபடி காலம் இருக்கும் கடவுச்சீட்டுகள் வைத்திருப்பவர்களை ஆணையம் குறிப்பிட்டுச் சொன்னது.
ஆண்டிறுதியில் விண்ணப்பங்களின் எண்ணிக்கை வெகு அதிகமாக உயர்வதை இது தடுக்கும் என்று ஆணையம் கூறியது. ஆண்டிறுதிப் பயணத் தேவைகளுக்கு ஏற்ப விண்ணப்பங்களை செயல்முறைப்படுத்த தனக்கு இது கூடுதல் அவகாசம் அளிக்கும் என்று அது குறிப்பிட்டது.
இரண்டு ஆண்டுகளாக முடங்கியிருந்த பயணங்கள் இவ்வாண்டு தொடக்கத்தில் அதிகரித்தபோது கடவுச்சீட்டுகளுக்கான விண்ணப்பங்கள் பெருமளவு கூடின. அவற்றைச் சமாளிக்க குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் திணறியது. ஒருசிலருக்கு ஆறு வாரங்கள் கழித்துதான் கடவுச்சீட்டு கையில் கிடைத்தது. இதனால் இம்முறை முன்கூட்டியே ஆணையம் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளது.
தாமதமாக விண்ணப்பம் செய்பவர்களுக்கு உரிய நேரத்தில் கடவுச்சீட்டுகள் கிடைக்காமல் போகலாம் என்று ஆணையம் எச்சரித்தது.
குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையத்தின் இணையத்தளம் அல்லது செயலிக்குச் சென்று கடவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இணையத்தளத்துக்குச் சென்று கடவுச்சீட்டு தயாராகி விட்டதா என்றும் பார்க்கலாம்.
தேவையற்ற காலதாமதத்தைத் தவிர்க்க, இணையத்தில் உள்ள வழிகாட்டிகளைப் படிக்கும்படி சொந்தமாகப் புகைப்படம் எடுத்துக் கொள்பவர்களிடம் ஆணையம் அறிவுறுத்தியது.
புகைப்படங்கள் பாஸ்போர்ட் வழிகாட்டிகளுக்கு ஏற்ப இல்லாவிட்டால் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம் என்று அது கூறியது.
மாறுதல் இல்லாத வெளிச்சத்தில், மூன்று மாதங்களுக்குள் புகைப்படம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். முகத்தில் எந்த உணர்வும் இருக்கக்கூடாது என்று ஆணையம் கூறியது.