சிங்கப்பூரில் இன நல்லிணக்கத்தை உறுதிசெய்வதற்கு கடின முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் இன, சமய விவகாரங்கள் அவ்வப்போது தலைதூக்கக்கூடும் என்பதால் அந்தப் பணி இன்னும் நிறைவடையவில்லை என்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணையமைச்சர் சுன் ஷுவெலிங் கூறியுள்ளார்.
சென்ற ஆண்டு ஜூன் மாதம் கலப்பினத் தம்பதிக்கு எதிராக இனவாதக் கருத்துகள் கூறப்பட்ட சம்பவத்தையும் சென்ற ஆண்டு மே மாதத்தில் இந்திய சிங்கப்பூரரான மாதை ஆடவர் ஒருவர் தாக்கிய சம்பவத்தையும் திருவாட்டி சுன் நினைவுகூர்ந்தார். இனவாதச் சம்பவங்கள் அனைத்துமே வெளிச்சத்துக்கு வருவதில்லை என்று கூறிய அவர், இத்தகைய சம்பவங்கள் நம் அக்கம்பக்கத்திலோ பள்ளிகளிலோ வேலையிடங்களிலோ நடைபெறக்கூடும் என்பதைச் சுட்டினார்.
'எஸ்ஜி கோர்' எனும் ஒற்றுமை, மீள்திறனுக்கான முன்னோடிப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றவர்களிடையே அவர் உரையாற்றினார். 'ஹியுமேனிட்டி மேட்டர்ஸ்' எனும் லாப நோக்கமற்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பயிற்சித் திட்டத்தில் 400 பேர் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் பாதுகாப்புத் துறையில் பணியாற்றுபவர்கள்.
சிங்கப்பூரின் பல கலாசார உணர்வை வலியுறுத்துவதும் நாட்டின் சமுதாய, பாதுகாப்பு உணர்வுகளை மேம்படுத்துவதும் இந்தத் திட்டத்தின் நோக்கங்கள்.
இதில் மேலும் இத்தகைய 19 குழுக்களை ஈடுபடுத்துவது இலக்கு. சீருடைப் பிரிவினர், பாதுகாப்பு தொடர்பான வேலைகளில் இருப்போர், தேசிய சேவையினர், உள்துறை அமைச்சு, தற்காப்பு அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகள் போன்றோர் இந்தப் பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவர்.
முன்னோடிப் பயிற்சியின் நிறைவு நிகழ்ச்சியில் உரையாற்றிய திருவாட்டி சுன் ஷுவெலிங், சிங்கப்பூரில் தற்போது நிலவும் ஒற்றுமை, இன, சமய நல்லிணக்கம் ஆகியவை இயல்பாக ஏற்பட்டதல்ல என்று கூறினார்.
"கடின முயற்சியின் பலன் இது; 1964ஆம் ஆண்டு நடந்த கலவரத்துக்குப் பிறகு மிகுந்த கவனத்துடன் பேணப்பட்ட அம்சம் இது,' என்றார். இது தொடர்ந்து செய்யப்படவேண்டிய பணி; ஏனெனில் பழைய நிலைக்கு எளிதில் திரும்புவது மனித இயல்பு என்று துணையமைச்சர் குறிப்பிட்டார்.
இணையம், சமூக ஊடகங்கள் ஆகியவற்றின் தாக்கம் அதிகரிக்கும் சூழல், சமூக ஒற்றுமைக்குச் சவாலானது. பயங்கரவாத மிரட்டல் சிங்கப்பூரில் உள்ள பல்வேறு இனங்களுக்கு இடையே வேற்றுமையை விதைக்கக் கூடியது என்றார் அவர்.
நாட்டின் நல்லிணக்கத்தைக் கீழறுக்கும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கிறது. இருப்பினும் சக சிங்கப்பூரர்களுடன் வலுவான புரிதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்திக்கொள்ள ஒன்றுபட்ட முயற்சியை நாம் மேற்கொள்வது அவசியம். இனவாதத்தை அதைவிடக் கூடுதலான இனவாதத்தாலோ தீவிரவாதத்தை அதைவிடக் கூடுதலான தீவிரவாதத்தாலோ எதிர்கொள்ளக் கூடாது என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.